சிபிஎம் செயலாளர் மீது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அக்கா மகன் கொலை வெறித் தாக்குதல்
சிதம்பரம்: சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் மீது தமிழக சுகாதரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்தின் அக்கா மகனும் சிதம்பரம் நகர திமுக செயலாளருமான செந்தில் குமார் நடத்திய கொலை வெறித் தாக்குதல் சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகின்றது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் சிபிஎம் செயலாளராக இருப்பவர் ராஜா.
இவர் ஞாயிறுக்கிழமை அன்று மதியம் ஒரு மணி அளவில் சிதம்பரம் மேலவீதியில் உள்ள சி.பி.எம். மாநில குழு உறுப்பினர் மூசாவின் கடையில் இன்று மறியல் சம்பந்தமாக பேசி கொண்டு இருந்தார்.
அப்போது திமுக, மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மேலவீதியில் உள்ள அனைத்து கடைகளையும் திறக்க வேண்டும் என்று கூறிக் கொண்டு வந்தனர்.
மூசா கடையின் அருகே வந்த இதே போன்று கூறிய போது சிபிஎம் செயலாளர் ராஜாவுக்கும், திமுக - காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது , மூப்பனார் பேரவையை சேர்ந்த மக்கின், ராதா, முகமது ஜியாவுதீன் ஆகிய மூவரும் செயலாளர் ராஜாவையும் மூசாவையும் தகாத வார்த்தையால் பேசியதோடு, ராஜாவின் சட்டையை பிடித்து கிழித்து, நடு ரோட்டில் வைத்து அடித்து உதைத்தனர்..
அப்போது தமிழக சுகாதரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்தின் அக்கா மகனும் சிதம்பரம் நகர திமுக செயலாளருமான செந்தில் குமார், மூசா கடையின் உள்ளே சென்று அங்கு இருந்த ராஜாவை தாக்கியுள்ளார்.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட சிபிஎம், அதிமுக, மதிமுக நிர்வாகிகள் சுமார் 200 க்கும் மேற்பட்டவர்கள் மேலவீதியில் ஒன்று கூடி ராஜாவை தாக்கியவர்கள் மீது நவடிக்கை எடுக்க கோரி சிதம்பரம் காவல் நிலையத்தின் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து, ராஜாவின் புகாரின் பேரில் சம்பந்தபட்டவர்களின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான ராஜா சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அந்த பகுதியில் பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications