திமுக-காங் தவிர அனைத்து கட்சிகளும் ஒன்று சேர வேண்டும்: பாஜக
சென்னை: சட்டசபை தேர்தலில் திமுக- காங்கிரஸ் தவிர அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், தமிழக பாஜக சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வருகிறது. ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கி விட்டோம். நானும், இல.கணேசனும் விரைவில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளோம்.
அப்போது மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துவோம்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து பாஜக தமிழ்நாட்டில் 69 இடங்களில் போராட்டம் நடத்தியது. 3,000 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் பாஜக தொடர்ந்து மக்களுக்காகப் போராடும்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக- காங்கிரஸ் தவிர அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்க வேண்டும். நாங்கள் யாருடன் கூட்டணி சேர்வது என்று இதுவரை எந்த முடிவும் செய்யவில்லை. எந்தக் கட்சியும் இதுவரை எங்கள் கட்சிக்கு அழைப்பு விடுக்கவில்லை.
தமிழக அரசும், மத்திய அரசும் மக்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை. எனவே அவர்களை எதிர்க்கும் வகையில் மற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்க வேண்டியது அவசியம்.
சிறுபான்மை மாணவ- மாணவிகளுக்கு மத்திய அரசு கல்வி உதவித் தொகை வழங்குகிறது. அதுபோல இந்து மாணவ- மாணவிகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும். இதை வற்புறுத்தி நாளை சென்னை மெமோரியல் ஹால் அருகே ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதை தடுக்க வேண்டும். பள்ளிகளில் கூட மத மாற்றம் புகுத்தப்படுகிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக அமல்படுத்த, மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்றார்.