குற்றாலத்தில் கொட்டமடிக்கும் குடிகாரர்கள்-குளிக்க அஞ்சும் பெண்கள்
குற்றாலம்: குடிகாரர்களின் அட்டகாசத்தால் குற்றாலத்தில் அமைதியாக குளிப்பவர்களுக்கு பல சிக்கல்கள் உருவாகின்றன.
மேற்கு தொடர்ச்சி மலையில் பொதிகையின் உச்சியில் பிறந்து மூலிகை செடிகளுக்கு இடையே தவழ்ந்து விழும் குற்றால அருவிகள் நோய் தீர்க்கும் குணமுடையது என இலக்கியங்கள் கூறுகின்றன. தமிழர்கள் மட்டுமின்றி பிற மாநிலத்தாரும், ஏன் வெளிநாட்டினரும் கூட குற்றாலத்தின் சிறப்பை உணர்ந்து இங்கு வந்து நீராடி செல்கின்றனர்.
மலை மீதுள்ள மூலிகைகளை அருவி நீர் தழுவிக்கொண்டு வருவதால் மூலிகை சத்து கலந்த நீர் உடலுக்கு புத்துணர்வை தருகிறது. நீரின் வேகம் மின்சார அணுக்களை தோற்றுவிக்கிறது.
நீராடுபவர்களுக்கு செரிமானம் ஏற்பட்டு நல்ல பசியும் ஏற்படுகிறது. தோல் நோயுள்ளவர்கள் வாரக்கணக்கில் இங்கு தங்கி நீராடி வந்தால் நோய்கள் தீரும் என்பது நீண்ட கால நம்பிக்கை. இந்த நம்பிக்கையை தகர்க்கும் விதத்தில் குடிப்பதற்காகவே பலர் குற்றாலத்திற்கு வருகின்றனர்.
பல இளைஞர்கள் நீண்ட தூரம் பைக்குகளில் பயணித்து வருகிறார்கள். வரும்போதும், போகும்போதும் இவர்கள் போதையிலேயே பயணிக்கிறார்கள். இதனால் ஏற்படும் விபத்துகளில் உயிர் பலி அதிகரிக்கிறது. இவர்களுக்கு போதை தெளியும் வரை மருத்துவ சிகிச்சை அளிப்பது கடினம்.
கட்சி கொடிகளுடன் காரில் வந்து கறைவேட்டியுடன் அருவிகளில் குடித்து விட்டு ஆட்டம் போடுவோரை கட்டுபடுத்த முடியாமல் போலீசார் தடுமாறுகின்றனர். நான் யார் தெரியுமா, அவருக்கு நான் யார் தெரியுமா போன்ற கேள்விகளுக்கு விடை சொல்ல தெரியாமல் போலீசார் பல சமயங்களில பணிந்து போக வேண்டியுள்ளது.
குடித்து விட்டு ஆட்டம் போடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மேல்மட்ட அதிகாரிகள் உத்தரவிட்டாலும் கூட பல நேரங்களில் அதை காற்றில் பறக்க விட வேண்டியுள்ளது என காவல்துறை அதிகாரி ஒருவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.