அடுத்த வாரம் மத்திய அமைச்சரவை மாற்றம்
மத்திய அமைச்சரான சரத் பவார் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக பொறுப்பேற்றுள்ளதால் அவரால் உணவு, விவசாயம் மற்றும் பொது வழங்கல் துறைகளைக் கையாள முடியவில்லை. இதையடுத்து தனது வேலைப்பளுவைக் குறைக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
சரத் பவாருக்கு தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகள் நிலவி வருகின்றன. முதலில் விலைவாசி உயர்வுப் பிரச்சினை தொடர்பாக அவரது தலை உருட்டப்பட்டது. காங்கிரஸும் கூட இந்த விவகாரத்தில் பவார் மீது அதிருப்தியுடன் இருந்து வந்தது.
இருப்பினும் ஆட்சி நீடிக்க பவார் அவசியம் என்பதால் பவாரை விட்டு வைத்திருந்தது காங்கிரஸ். ஆனால் சமீபத்தில் எழுந்த ஐபிஎல் ஊழல் விவகாரத்தில் பவார் குடும்பத்துப் பங்குகள் குறித்த புகார்கள் காங்கிரஸை பெரும் எரிச்சலில் ஆழ்த்தின. இனியும் பவாருக்கு முக்கியத்துவம் தரத் தேவையில்லை என்ற புகைச்சல் காங்கிரஸுக்குள் அதிகரித்து வந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் ஐசிசி தலைவராக பொறுப்பேற்றார் பவார். இதையடுத்து பவார் பிரதமரை சந்தித்து, தனது வேலைப்பளுவைக் குறைக்குமாறு கோரியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த ஆறு மாதங்களாகவே எனது வேலைப்பளுவைக் குறைக்குமாறு பிரதமரிடம் கூறி வருகிறேன்.
இன்று பிரதமரை நேரில் சந்தித்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினேன். கட்சிக்காகவும், ஐசிசிக்காகவும் நான் நிறைய நேரத்தை செலவிட வேண்டியுள்ளதால் இந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளேன் என்றார் பவார்.
இதையடுத்து பவார் வசம் தற்போது உள்ள துறைகளில் உணவு, பொது வினியோகம், நுகர்வோர் நலம் ஆகிய துறைகளை வேறு அமைச்சருக்கு மாற்ற பிரதமர் நடவடிக்கை எடுக்கக்கூடும் எனத் தெரிகிறது. பவார் விவசாயத்துறையை மட்டும்தன் வசம் தொடர்ந்து வைத்திருப்பார்.
பவாரிடமிருந்து பறிக்கப்படும் துறைகளை காங்கிரஸ் அமைச்சர்களிடம் பிரதமர் ஒப்படைக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இதன் மூலம் பவாரின் ஆதிக்கத்தையும் குறைக்க முடியும் எனவும் காங்கிரஸ் கருதுகிறது.
அதே நேரத்தில் சில மத்திய அமைச்சர்களின் துறைகளையும் மாற்ற பிரதமர் முடிவு செய்துள்ளார். அமைச்சர் குமாரி செல்ஜா உள்ளிட்டோரின் துறைகள் மாற்றப்படுவதோடு, உத்தரப் பிரதேசம், பிகார் மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரும் வகையி்ல் புதிதாக சில அமைச்சர்களை சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் இந்த அமைச்சரவை இந்த மாற்றங்கள் செய்யப்படும் என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.