என்எல்சி ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது-நள்ளிரவு முதல் பணிக்குத் திரும்பினர்
சென்னை: கடந்த 5 நாட்களாக நடந்து வந்த என்எல்சி தொழிலாளர்களின் ஸ்டிரைக் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. ஊழியர்களின் 3 முக்கிய கோரிக்கைகளை ஏற்பதாக நிர்வாகம் அறிவித்ததால் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக என்எல்சி நிரந்தரத் தொழிலாளர்கள் கால்வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதையடுத்து நிர்வாகத்திற்கும், தொழிலாளர் பிரதிநிதிகளான தொமுச மற்றும் பாமக தொழிற்சங்களுக்கு இடையே, சென்னையில் மண்டலத்தொழிலாளர் நல ஆணையர் ஜெகன்னாத ராவ் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.
4 முறை நடந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் கடந்த 5 நாட்களாக வேலைநிறுத்தம் நீடித்தது. இந்த நிலையில் நேற்று மாலை 5வது கட்டப் பேச்சுவார்த்தை நெய்வேலி இல்லத்தில் பேச்சுவார்த்தை தொடங்கியது.
கிட்டத்தட்ட 7 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையின் இறுதியில், உடன்பாடு ஏற்பட்டது.
தொழிலாளர்களின் மூன்று முக்கிய கோரிக்கைகளான கூடுதல் ஊக்கத் தொகை, பணிக்கொடை, அலவன்ஸ் ஆகியவற்றை ஏற்பதாக நிர்வாகம் ஒப்புக் கொண்டது. இதையடுத்து பேச்சுவார்த்தை சுபமாக முடிந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டு தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினர்.