அடு்த்த வாரம் முதல் சர்வதேச விலையில் தான் பெட்ரோல்-டீசல்!
10 நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் மீதான விலைக் கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கியது. இதன்மூலம் சர்வதேச அளவில் பெட்ரோலியம் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை அவ்வப்போது நிர்ணயித்துக் கொள்ள அனுமதி தரப்பட்டது.
ஆனால், என்று முதல் இந்த அரசு கட்டுப்பாட்டில்லாத விலை அமலுக்கு வரும் என்பதை மத்திய அரசு அறிவிக்கவில்லை.
அதே நேரத்தில் முதல் கட்டமாக பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3.73 உயர்த்தியது மத்திய அரசு. டீசல் விலை லிட்டருக்கு ரூ.2ம், சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.35ம் உயர்த்தப்பட்டது.
பெட்ரோல், டீசல் விலைகளை சர்வதேச விலை நிலவரத்தைப் பொறுத்து மாற்றிக் கொள்ளும் சுதந்திரம் கிடைத்துவிட்ட நிலையில், அதை அமல்படுத்துவது குறித்த வழிமுறைகளை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் வேகவேகமாக வகுத்து வருகின்றன.
இது குறித்து ஆலோசிக்க இந்திய எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகளின் கூட்டம் நாளை நடக்கவுள்ளதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து தனியார் பெட்ரோலிய நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் தினந்தோறும் மாறுபட்டு வரும் நிலையில், இந்தியாவில் தினந்தோறும் ஒரு விலைக்கு பெட்ரோல், டீசலை விற்க முடியாது என்பதால், வாரத்துக்கு ஒருமுறையோ அல்லது இரு வாரங்களுக்கு ஒருமுறையோ புதிய விலை நிர்ணயிக்கப்படலாம் என்று தெரிகிறது.
வரும் 14ம் தேதிக்குள் இந்த விலை நிர்ணயம் தொடர்பான விதிமுறைகளை உருவாக்கிவிடுவோம் என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் 14ம் தேதிக்குப் பின் எந்த நேரத்திலும் பெட்ரோல், டீசல் விலைகள் சர்வதேச சந்தை விலையை பிரதிபலிக்கும் வகையில் மாறலாம்.
இதனால் தங்கம்-வெள்ளி விலை நிலவரம் மாதிரி இனி பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் குறித்தும் இனி வாரவாரம் மத்திய பெட்ரோலியத்துறையும் எண்ணெய் நிறுவனங்களும் செய்திக் குறிப்புகள் வெளியிடும் நிலை வரலாம்.