கொச்சி: தவறுதலாக குண்டு பாய்ந்து மூத்த கடற்படை அதிகாரி பலி
கொச்சியில் உள்ள ஐஎன்எஸ் துரோனாச்சாரியா தென் பிராந்திய கடற்படை தளத்தில் இன்று இந்தச் சம்பவம் நடந்தது.
இங்கு இன்று காலை 10.30 மணிக்கு வழக்கமான துப்பாக்கி சுடும் பயிற்சி நடந்தபோது அதை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த தென்பிராந்திய கடற்படை தளபதியான 'ரியர் அட்மிரல்' எஸ்.எஸ்.ஜாம்வால் மீது குண்டு பாய்ந்தது. இதில் ஜாம்வால் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து உயர் மட்ட விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லியிலிருந்து கடற்படை அதிகாரிகளும், கடற்படை உளவுப் பிரிவினரும், மத்திய உளவுப் பிரிவினரும் கொச்சி விரைந்துள்ளனர்.
பலியான ஜாம்வால் தென் மண்டல கடற்படையின் இரண்டாவது ரேங்கி்ல் உள்ள மிக மூத்த அதிகாரியாவார்.
மாஸ்கோ உள்பட பல நாடுகளில் இந்தியத் தூதரகங்களில் கடற்படை பிரிவு அதிகாரியாக பணியாற்றியவர். ஐஎன்எஸ் பியாஸ் கப்பல் படை பிரிகேடின் கேப்டனாக இருந்தவர்.
அவருக்கு மனைவி, மகள், மகன் உள்ளனர்.