முதியவர்களை ஊசி போட்டு 'கருணை' கொலை செய்த மருத்துவமனை பெண் துப்புறவு தொழிலாளி?

விருதுநகர் மாவட்ட சி.ஐ.டி.யூ. தலைவரான அசோகனின் உறவினர் செல்வராஜ் (60), உடல் நிலை பாதிக்கப்பட்டு சில தினங்களுக்கு முன் இறந்தார்.
அசோகனுக்கு அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பாத்திமா என்ற பெண் ஊசி போட்டதைத் தொடர்ந்து அவர் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பெண் குறித்து அசோகன் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல் கிடைத்தது.
நோய்வாய்ப்பட்ட முதியவர்களை அவர்களது உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு தொகையைப் பெற்றுக் கொண்டு பாத்திமா அந்தப் பெண் விஷ ஊசி போட்டு 'கருணை' கொலை செய்து வருவதாகத் தெரியவந்தது.
இதையடுத்து உடனடியாக விருதுநகர் மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்பி மற்றும் முதல்வரின் தனிப் பிரிவுக்கு புகார் மனு அனுப்பினார் அசோகன்.
இதைத் தொடர்ந்து செல்வராஜின் மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்ய அருப்புக்கோட்டை போலீசாருக்கு உத்தரவிட்ட எஸ்.பி பிரபாகரன், நேரடியாக அருப்புக்கோட்டைக்கும் சென்று விசாரணை நடத்தினார்.
ஊசி போட்டு கொல்லப்பட்டதாக கூறப்படும் செல்வராஜின் மகன் சந்திரன் உள்பட அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்.
ஊசி போட்டதாகக் கூறப்படும் அருப்புக்கோட்டை நகராட்சி காலனியைச் சேர்ந்த பாத்திமாவிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பாத்திமா அருப்புக்கோட்டையில் ஒரு தனியார் மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். தனது வீட்டில் வைத்து காய்ச்சல், தலைவலி என்று வரும் நேயாளிகளுக்கு ஊசி போட்டு, மருந்துகள் கொடுத்து வந்துள்ளார்.
செல்வராஜுக்கு போடப்பட்டதாகக் கூறப்படும் மருந்தை பாத்திமாவிடமிருந்து போலீசார் கைப்பற்றியுள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவர் விஷ ஊசி போட்டது உறுதியானால் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications