கொழும்பு ஐ.நா. அலுவலகம் மூடப்பட்டது-ஊழியர்கள் திரும்பப் பெறப்பட்டனர்
இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த நிபுணர் குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து ஐ.நா. அலுவலகத்தை அந் நாட்டு சிங்கள அமைப்புகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த முற்றுகையைத் தடுக்க இலங்கை அரசு நடவடிக்கை எடு்க்கத் தவறியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், ஐ.நா. அலுவலகத்தை மூட உத்தரவிட்டார்.
இதையடுத்து கொழும்பு ஐ.நா. அலுவலகம் நேற்றிரவு மூடப்பட்டு, ஊழியர்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளனர்.
முன்னதாக ஐ.நா. நிபுணர் குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அலுவலகத்துக்கு வெளியே புத்த பிட்சுக்களுடன் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் இலங்கை வீட்டுவசதித் துறை அமைச்சர் விமல வீரவன்சா.
இந்தக் குழுவை ஐ.நா. வாபஸ் பெறுவரை சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடர்வேன் என்று அவர் அறிவித்துள்ளார்.
ஆனால், நிபுணர் குழுவை திரும்பப் பெற முடியாது என்று ஐ.நா. ஏற்கெனவே திட்டவட்டமாகக் கூறிவிட்டது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்டப் போரின் போது, இலங்கை ராணுவம் தமிழர்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தது. இதற்கு இந்தியா, இஸ்ரேல், பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் ஆயுதங்கள் வழங்கியதாக குற்றம் சாட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறார் விமல்:
இந் நிலையில் அமைச்சர் விமல் வீரவன்ச தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளதாக இலங்கையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக அவர் அதிபர் ராஜபக்சேவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும், ஐ.நாவுக்கு எதிரான போராட்டத்திற்கு தனது அமைச்சர் பதவி தடையாக இருப்பதால் ராஜிநாமா செய்வதாக அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
போராட்டத்தை தடை செய்ய முடியாது-பெரிஸ்:
இந் நிலையில் ஐ.நாவுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தை தடை செய்ய முடியாது என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய அவர் இதைத் தெரிவித்தார்.