வீரபாண்டியார் நெஞ்சில் 'ஈட்டியைப் பாய்ச்சிய' கருணாநிதி!
சேலம்: முதல்வர் கருணாநிதியை சந்திக்க நான் சென்றபோது, போர்க்குற்றவாளியை சந்திக்க ஏன் வந்தீங்க என்று என்னிடம் அவர் கேட்டபோது வேதனை அடைந்தேன். நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சியது போல அது இருந்தது என்று கூறியுள்ளார் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்.
சேலம் மாவட்ட மற்றும் மாநகர திமுக பொதுக்குழு கூட்டம், அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் ஆகஸ்ட் 20ம் தேதி முதல்வர் கருணாநிதி சேலம் வரும்போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது.
பின்னர் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேசுகையில், கலைஞரை நான் சந்திக்கப்போனேன். அப்போது 'ஏன் போர் குற்றவாளியை சந்திக்க வந்தீங்க' என்று கேட்டார். அப்போது என் நெஞ்சில் ஈட்டி பாய்ந்தது போல் இருந்தது.
ஒரு சில பத்திரிகைகள் தங்கள் பத்திரிகைகள் விற்க வேண்டும் என்பதற்காக, தங்கள் விருப்பம் போல் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு 200 அல்லது 500 பத்திரிகைகள் கூடுதலாக விற்கும். ஒரு சில பத்திரிகைகளை மட்டும்தான் நான் குறிப்பிடுகின்றேன். பத்திரிகைகளை நம்பி நான் இல்லை என்றார் அவர்.