கோர்ட் அனுமதி-மீண்டும் சொற்பொழிவாற்றப் போகிறார் நித்தியானந்தா
பெங்களூர்: பெங்களூர் கோர்ட் தனக்கு விதித்த கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளதால் மீண்டும் ஆன்மீக சொற்பொழிவாற்றப் போகிறார் நித்தியானந்தா. நாளை தனது பிடுதி ஆசிரமத்தில் பக்தர்களிடையே ஆன்மீக சொற்பொழிவாற்றவுள்ளாராம்.
ரஞ்சிதாவுடன் படுக்கை அறையில் அந்தரங்கமாக இருந்து வீடியோவில் பிடிபட்டார் நித்தியானந்தா. இந்த சம்பவத்திற்குப் பின்னர் நித்தியானந்தா தலைமறைவானார். ஒரு மாத ஓட்டத்திற்குப் பின்னர் இமாச்சலப் பிரதேசத்தில் வைத்து அவரை கர்நாடக போலீஸார் கைதுசெய்தனர். ஆனால் ரஞ்சிதா மட்டும் இன்னும் அகப்படவே இல்லை. எங்கிருக்கிறார் என்றே யாருக்கும் தெரியவில்லை.
கைது செய்யப்பட்ட நித்தியானந்தா ராம்நகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் நிபந்தனை ஜாமீனில் வெளி வந்துள்ளார்.
அவருக்கு ஜாமீன் கொடுத்த கர்நாடக உயர்நீதிமன்றம், நிரபராதி என நிரூபிக்கும் வரை ஆன்மீக சொற்பொழிவாற்றக் கூடாது. 15 நாட்களுக்கு ஒருமுறை போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்தது.
இந்த நிலையில் இவற்றை தளர்த்தக் கோரி நித்தியானந்தா தரப்பில் மனு செய்யப்பட்டது. இதை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், நேற்று நிபந்தனைகளை தளர்த்தி உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து அவர் ஆன்மீக சொற்பொழில் மீண்டும் இறங்கவுள்ளார். நாளை தனது ஆசிரமத்தில் சிஷ்யர்களிடையே அவர் உரையாற்றவுள்ளாராம். 5 மணிக்கு நடைபெறும் இந்த சொற்பொழிவைக் கேட்க பொதுமக்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்று ஆசிரமம் கூறியுள்ளது.