ஆட்சியைப் பிடிப்போம் என்று கூறி அனாதைகளாகி விட்ட தலைவர்கள்-ஸ்டாலின்

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று மாலை பல்வேறு கட்சிகளை சேர்ந்த சுமார் 4 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில்,
கழகத்தை நம்பி, கலைஞரின் தலைமையை ஏற்று பணியாற்ற உரிமை எடுத்துக் கொண்டு வந்துள்ள உங்களை வாழ்த்துவதோடு உங்களுக்கு பணிவோடு தெரிவித்துக் கொள்ள விரும்புவது, தி.மு.க.வுக்கு நீண்ட வரலாறு, பாரம்பரியம் உண்டு. தி.மு.க நேற்று தொடங்கி இன்று உருவான இயக்கம் அல்ல. இன்று எத்தனையோ கட்சிகள் திடீர் திடீர் என உருவாகின்றன.
அப்படி உருவான கட்சிகளின் தலைவர்கள், நான் தான் அடுத்த முதல்வர் என்று சொன்னவர்களை நாடு நன்றாக பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது. அப்படி கூறியவர்கள் எல்லாம் இன்று அடையாளம் தெரியாமல் போய், அனாதைகளாக, அப்பாவிகளாக போன காட்சிகளையும் மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
1949-ம் ஆண்டு கொட்டும் மழையில் சென்னை ராபின்சன் பூங்காவில் தி.மு.க.வை அண்ணா தொடங்கிய போது ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காக கட்சியை தொடங்கியதாக கூறவில்லை. இது ஏழை, எளிய மக்கள், தொழிலாளர்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் என்று தான் அண்ணா சொன்னார். அதனால் தான் 1949-ல் தொடங்கப்பட்ட தி.மு.க தேர்தல் களத்தில் உடனே இறங்கி விடவில்லை.
1956-ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் தி.மு.க தேர்தல் களத்தில் இறங்கலாமா? என கழக தோழர்கள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டது. அதில் பெரும்பான்மையான மக்கள் தி.மு.க. தேர்தலில் போட்டியிடலாம் என கருத்து தெரிவித்து வாக்குப்பெட்டியில் காகிதத்தில் எழுதி போட்டார்கள்.
அதன் அடிப்படையில் 1957-ல் நடைபெற்ற தேர்தலில் தான் முதல் முதலாக தி.மு.க. தேர்தலில் போட்டியிட்டு 15 பேர் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு சென்றார்கள். அந்த 15 பேரில் ஒருவராக அன்று திருச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த குளித்தலை தொகுதியில் இருந்து முதல் முறையாக சென்றவர் தான் தலைவர் கலைஞர். எனவே தலைவர் கலைஞரை சட்டமன்றத்திற்கு முதல் முறையாக அனுப்பிய மாவட்டம் என்ற பெருமையும் திருச்சிக்கு உண்டு.
அதனைத் தொடர்ந்து 1962-ல் 50 பேர் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு சென்றார்கள். 1967-ல் நடந்த தேர்தலில் தி.மு.க பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று முதல் முறையாக தமிழகத்தில் ஆட்சி அமைத்தது. அண்ணா முதல்வராக பதவி ஏற்றார். அண்ணா மறைவிற்கு பின்னர் 1971-ல் கலைஞர் முதல்வராக பொறுப்பு ஏற்று பணியாற்ற தொடங்கினார். அதன்பின்னர் நடந்த பல தேர்தல்களில் தி.மு.க வெற்றி வாய்ப்பினை இழந்திருந்தாலும் அதனை கண்டு துவண்டு விடாமல் நாட்டு மக்களுக்காக உழைத்துக்கொண்டு இருப்பது தான் தி.மு.கழகம்.
வெற்றி கண்டபோது வெறிகொண்டதும் கிடையாது. தோல்வி வந்தபோது துவண்ட போனதும் கிடையாது. வெற்றி, தோல்வி இரண்டையும் சரிசமமாக கருதுவது தான் தி.மு.கழகம்.
நம்மை போல் வெற்றி பெற்றதும், தோல்வி கண்டதும் நாட்டில் தி.மு.க ஒன்று தான் என்று பெருமையாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு உள்ள இந்த இயக்கத்திற்கு வந்து உள்ள உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.
கலைஞர் ஆட்சி 4 ஆண்டுகள் நிறைவடைந்து ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து இருப்பதை தமிழக மக்கள் மட்டும் இன்றி இந்தியா முழுவதும் உள்ளவர்களும் வியப்பாக பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த ஆட்சிக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications