குற்றாலத்தில் அதிக கட்டணம் வசூலித்த குத்தகைதாரர் உள்பட 4 பேர் கைது
குற்றாலம்: குற்றாலத்தில் வாகனங்களை நிறுத்த அதிக கட்டணம் வசூலித்த குத்தகைதாரர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
குற்றால சீசனின் போது அங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் கார் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பேரரூவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சித்திர சபை, ரத வீதி ஆகிய பகுதிகளில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஏலம் விடப்பட்டுள்ளது.
இதில் ஏலம் எடுத்த குத்தகைதாரர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், மேலும் இருசக்கர வாகனங்களுக்கு இலவசம் என தமிழக அரசு அறிவித்தும் அவற்றுக்கும் கட்டணம் வசூலிப்பதாகவும், சுற்றுலா பயணிகளிடம் இருந்து போலீஸ் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து கடந்த வாரம் எஸ்.பி. ஆஸ்ரா கர்க் குற்றாலம் வந்து கார் பார்க்கிங் கட்டண வசூலை ஆய்வு செய்தார். அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என அவர்களை எச்சரிக்கை செய்திருந்தார். மேலும், அந்த பகுதிகளில் சோதனையிலும் ஈடுபட்டிருந்தார். அப்போது பேரரூவி கார் பார்க்கிங் பகுதியில் சுப்பிரமணியன் என்பவரிடம் இருசக்கர வாகனத்திற்கு கட்டணம் வசூலித்தது தெரிய வந்தது.
இதுகுறித்து சுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் கார் பார்க்கிங் குத்தகைதாரரான காசிமேஜர்புரத்தை சேர்ந்த சுந்தர் என்பவரின் மகன் முருகன், மாடசாமி என்பவரின் மகன் குத்தாலிங்கம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதே போல் ஐந்தருவியில் இரு சக்கர வாகனத்திற்கு கட்டணம் வசூலித்த சுப்பிரமணியன், இலஞ்சியை சேர்ந்த முத்தையா என்பவரின் மகன் குட்டி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications