ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களின் 3 கார்கள் எரிப்பு:தொடரும் இனவெறி தாக்குதல்
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டனர், கொலை செய்யப்பட்டனர் என்பது போன்ற செய்தி செய்தித் தாள்களில் அடிக்கடி வருகின்றது.
இந்நிலையில் அடிலெய்டு நகரில் உள்ள குடியிருப்புப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய மாணவர்களின் 3 கார்களுக்கு ஆஸ்திரேலிய இளைஞர்கள் தீ வைத்துள்ளனர்.
இது குறித்து இந்திய மாணவர் யாசிப் முல்தானி கூறியதாவது:
நேற்று அதிகாலையில் நாங்கள் தங்கியிருக்கும் குடியிருப்புப் பகுதிக்கு சுமார் 15 ஆஸ்திரேலிய இளைஞர்கள் பைக்குகளில் வந்தனர். அவர்கள் எங்கள் 3 கார்களை அடையாளம் கண்டுகொண்டு அடித்து நொறுக்கிவிட்டு, கார்களின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தீ வைத்து விட்டுச் சென்றனர்.
எங்களின் தங்குமிடம் மற்றும் வாகனங்களை தெரிந்து கொண்டு வேண்டுமென்றே தான் தீ வைத்துள்ளனர்.
இது மட்டுமின்றி எங்களுக்கு வரும் கடிதங்களை திருடுவதும், இனவெறி வாசகங்கள் மற்றும் படங்களை வீட்டு வெளிச்சுவரில் வரைவதும் என எங்களுக்கு பல தொல்லைகளை கொடுத்து வருகின்றனர் என்று அவர் கூறினார்.
கடந்த 3 மாதங்களில் இந்திய மாணவர்களின் 12 வாகனங்கள் தாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.