வன்முறையை தூண்டும்படி பேசவில்லை-சீமான்
சென்னை: வன்முறையைத் தூண்டும் வகையில் சீமான் எதையும் பேசவில்லை என்று சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் அவரது வக்கீல் வாதிட்டார்.
இலங்கைப் படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து போராட்டம் நடத்தியபோது பேசிய பேச்சுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னையில் கடந்த 10-ந் தேதி அன்று இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதிருப்தி அளிக்கிறது. இதனை கண்டிக்கும் வகையில் நான் ஆர்ப்பாட்டத்தில் பேசினேன்.
அரசியல் அமைப்பு சட்டத்தில் அடிப்படை உரிமையாக கூறப்பட்டுள்ள பேச்சுரிமை அடிப்படையில்தான் எனது கருத்துக்களை தெரிவித்தேன். இதில் எந்த சட்டமீறலும் இல்லை. எனவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று
கோரியுள்ளார்.
இந்த மனு இன்று நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்திய இறையாண்மைக்கு விரோதமாகவோ அல்லது வன்முறையைத் தூண்டும் வகையிலோ சீமான் எதையும் பேசவில்லை. எனவே அவரை ஜாமீனில் விட வேண்டும் என்று வாதிட்டார்.
இதையடுத்து சீமான் வழக்கு தொடர்பான ஆவணங்களை நாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.
சீமானுக்கு ஆதரவாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் நேற்று சீமானை விடுதலை செய்யக் கோரி,சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த இந்த வக்கீல்கள், உயர்நீதிமன்ற நுழைவாயில் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர். சீமானை விடுதலை செய்யக்கோரும் வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தியபடி சுமார் 20 நிமிடம் ஆர்ப்பாட்டம் செய்தனர்.












Click it and Unblock the Notifications