பெருந்தலைவர் காமராஜரின் வாரிசு முதல்வர் கருணாநிதி: கனிமொழி
திருநெல்வேலி: பெருந்தலைவர் காமராஜரின் வாரிசாக திகழ்ந்து வரும் முதல்வர் கருணாநிதி, இன்று பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை 99 சதவீதத்திற்கும் மேலாக உயர்த்திக் காட்டியுள்ளார் என்று ராஜ்யசபா திமுக எம்பி கனிமொழி கூறினார்.
திருநெல்வேலியி்ல் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளையொட்டி சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமையில் கல்வி வளர்ச்சி நாள் விழா நடந்தது.
பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் மேல் நிலைப்பள்ளியில் நடந்த இந்த விழாவில் பேசிய கனிமொழி,
மதிய உணவு திட்டம் மூலம் கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியவர் பெருந்தலைவர் காமராஜர். அவரது ஆட்சிக் காலத்தில் மதிய உணவு திட்டம் மூலம் 45 சதவீதமாக இருந்த பள்ளி மாணவர் சேர்க்கையானது 75 சதவீதமாக உயர்ந்தது.
அவர் வழியில் வந்த கருணாநிதி அந்த திட்டத்தைத் தொடர்ந்து சிறப்புடன் நடத்தி வருகிறார்.
காமராஜர் இறந்தபோது மழையில் நனைந்து கொண்டு இறுதிச் சடங்கு பணியில் ஈடுபட்டவர் கருணாநிதி. அப்போது அங்கிருந்த காங்கிரஸ் கட்சியினர், காமராஜருக்கு ஒரு வாரிசு இல்லை என்ற குறையை கருணாநிதி தீர்த்து வைத்துவிட்டதாகக் கூறினர்.
காமராஜரின் வாரிசாக திகழ்ந்து வரும் கருணாநிதி, இன்று பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை 99 சதவீதத்திற்கும் மேலாக உயர்த்திக் காட்டியுள்ளார்.
நாட்டில் பள்ளிக் கல்விக்கு மற்ற மாநிலங்களில் 3 முதல் 10 சதவீதம் வரையே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் 20 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த ஆண்டு பள்ளிக் கல்விக்கு ரூ. 10,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தைவிட 88 சதவீதம் அதிகம் ஆகும் என்றார் கனிமொழி.












Click it and Unblock the Notifications