தலித் மக்களுக்காக போராடினால் அமைதிக்குக் குந்தகமா? முதல்வருக்கு சிபிஎண் கேள்வி
வேலூர்: உத்தப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சனையை தூண்டி விடுகிறது என்று முதலமைச்சர் கூறியிருப்பது முற்றிலும் தவறு. கடந்த ஒரு வருடமாக இதுகுறித்து பல முறை ஆட்சியரிடம் முறையிடப்பட்டது. ஆனால், நடவடிக்கை இல்லை. தலித் மக்களுக்கு எதிராக நிகழும் கொடுமையை சகித்துக் கொண்டிருப்பதுதான் அமைதியா? அதை எதிர்த்து போராடுவது அமைதிக்கு குந்தகமா? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக வேலூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தமிழ்நாட்டில் 7 ஆயிரம் கிராமங்களில் தீண்டாமை பல்வேறு வடிவங்களில் உள்ளதாக தமிழக அரசின் கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த கொடுமைகளுக்கு முடிவுகட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் தொடர்ந்து போராடி வருகிறது.
அதன் ஒரு பகுதியாகத்தான் உத்தபுரத்தில் நிலவும் தீண்டாமைக் கொடுமையை ஒழித்திட போராடி வருகிறோம். மதுரையில் நடந்த மறியல் போராட்டத்தின் போது காவல்துறையினர் ஒரு எம்பி என்றும் பாராமல் அடக்குமுறையை கையாண்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.
உத்தப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சனையை தூண்டி விடுகிறது என்று முதலமைச்சர் கூறியிருப்பது முற்றிலும் தவறு. கடந்த ஒரு வருடமாக இதுகுறித்து பல முறை ஆட்சியரிடம் முறையிடப்பட்டது. ஆனால், நடவடிக்கை இல்லை. தலித் மக்களுக்கு எதிராக நிகழும் கொடுமையை சகித்துக் கொண்டிருப்பதுதான் அமைதியா? அதை எதிர்த்து போராடுவது அமைதிக்கு குந்தகமா?
உத்தப்புரத்தில் மறியல் செய்தபோது கைது செய்தவர்களை, மாலையில் விடுதலை செய்ய சொன்னது நான்தான் என்று தமிழக முதல்வர் கூறுகிறார். அப்படியென்றால் காலையில், அடித்து இழுத்து கைது செய்ய சொன்னதும் முதலமைச்சர் தானா?
சிதம்பரம் நடராசர் ஆலயத்தின் தெற்கு வாசலை அடைத்திருப்பதோடு நீதிமன்ற தீர்ப்புப்படி கட்டுமானப்பணிகள் நடைபெறவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது. அங்கு செய்ய வேண்டியது கட்டுமானப்பணி அல்ல. அந்தச் சுவரை இடிப்பதுதான் என்றார் ராமகிருஷ்ணன்.
வைகோ, நெடுமாறனை விடுவிக்க கோரிக்கை
இதேபோல தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து போராட்டம் நடத்திய வைகோ, பழ. நெடுமாறன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும் என்று சிபிஎம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை:
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை கண்டிக்கும் வகையில் இலங்கை தூதரக அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்திட ஊர்வலமாகச் சென்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் மற்றும் 50 பெண்கள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
இலங்கை ராணுவத்தினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுத்திட மத்திய - மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் அத்தாக்குதலை தடுக்க வலியுறுத்தி பல அரசியல் கட்சிகள், மீனவர் அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
இச்சூழலில் இலங்கைத் தூதரக அலுவலகத்தை நோக்கி கண்டனம் முழங்கி ஊர்வலமாக சென்ற தலைவர்கள், பெண்கள் உள்பட பலரையும் கைது செய்து தமிழக சிறைகளில் அடைத்துள்ளது ஜனநாயக விரோத நடவடிக்கை மட்டுமின்றி, எதிர்க் கட்சிகளின் குரல்வளையை நெரிப்பதுமாகும். தமிழக அரசின் இச்செயலை வன்மையாக கண்டிப்பதுடன், கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்திட வேண்டுமெனவும், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடுக்கும் தாக்குதல்களை தடுத்து நிறுத்திட தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ள மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டுமென கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது என்று கூறியுள்ளார்.