தமிழக சட்டசபை தேர்தல்-இளைஞர் காங் நிர்வாகிகளுடன் ராகுல் தீவிர ஆலோசனை
தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா மற்றும் 8 பொதுச் செயலாளர்களை டெல்லிக்கு அழைத்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி நீண்ட ஆலோசனை நடத்தினார்.
அதில் தமிழக அரசியல் நிலவரம், சட்டமன்றத் தேர்தல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று கூறப்பட்டாலும், அதை உடைக்க பல தரப்பிலும் முயற்சிகள் நடக்கின்றன.
திமுக கூட்டணியை நீண்ட காலத்துக்கு தொடர ராகுல் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. தேமுதிகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற கருத்தை அவர் ஆதரிப்பதாகத் தெரிகிறது.
அதே நேரத்தில் காங்கிரசுடன் எப்படியாது கூட்டணி அமைக்க அதிமுகவும் கடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. காங்கிரசில் உள்ள 'அதிமுக அபிமானிகள்' இதற்கான முயற்சிகளுக்கு ஜெயலலிதாவுக்கு உதவி வருகின்றனர்.
தேமுதிகவுடன் கூட்டணிப் பேச்சுவார்தையை தொடர்ந்து கொண்டிருந்தாலும் காங்கிரசுக்கு வலை வீசுவதை அதிமுக விடவில்லை.
தேமுதிக தலைவர் விஜய்காந்த் சார்பில் அவரது மனைவி பிரேமலதா கொடநாடு எஸ்டேட்டிலேயே வைத்து ஜெயலலிதாவை சந்தித்துப் பேசியதாகவும் தகவல்கள் உள்ளன. இருப்பினும் காங்கிரசுடன் கூட்டு சேர்ந்தால் தவிர தனக்கு வெற்றி வாய்ப்பு குறைவே என்று அதிமுக கருதுகிறது.
இந் நிலையில் கூட்டணி விவகாரத்தை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு தமிழகத்தில் காங்கிரஸை வலுப்படுத்தும் வேலைகளில் ராகுல் காந்தி ஈடுபட்டுள்ளார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் 'காங்கிரஸ் பெரிசுகளை' ஒதுக்கிவிட்டு அதிகளவில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவும் ஆகியோர் திட்டமிட்டுள்ளார்.
இந் நிலையில் தான் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜாவையும் 8 பொதுச் செயலாளர்களையும் டெல்லிக்கு அழைத்து ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
அதே போல தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்களான காயத்ரி தேவி, விஷ்ணு பிரசாத், அருள் அன்பரசு, ராஜ்குமார் ஆகியோரையும் அழைத்துப் பேசியுள்ளார்.
அப்போது தேர்தல் பணிகள், தேர்தல் யுக்திகள், காங்கிரஸ் எந்த வகையான கூட்டணி அமைக்கலாம், அதன் வெற்றி வாய்ப்பு, வேட்பாளர்கள் தேர்வு ஆகியவை குறித்து ராகுல் விரிவாக விவாதி்த்ததாகத் தெரிகிறது.
காங்கிரஸை உள்ளடக்கிய பலவித கூட்டணிகளுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து ராகுல் கேட்டறிந்ததாகத் தெரிகிறது.
கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து கருத்து சொல்ல யுவராஜா மறுத்து விட்டார். ஆனால், தமிழக தேர்தலில் ராகுல் காந்தி தனி கவனம் செலுத்துகிறார். அதற்காக அவர் ஒரு 'மாஸ்டர் பிளான்' வகுத்துள்ளார் என்றார்.