திருமாவளவனின் தந்தை காலமானார்: கருணாநிதி-ஸ்டாலின் நேரில் அஞ்சலி
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் தந்தை ச.ராமசாமி என்ற தொல்காப்பியன் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 76.
கடந்த 6 மாதமாக நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கடந்த 5ம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து சென்னை, ராமச்சந்திர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், நிமோனியா தொற்று ஏற்பட்டு நுரையீரல் செயலிழந்தது. செயற்கை சுவாச சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்றிரவு அவர் காலமானார்.
மறைந்த தொல்காப்பியனின் உடல் சென்னை, வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, 2வது நிழற்சாலை, எண் ஆர்-62ல் உள்ள தாய்மண் அறக்கட்டளை அலுவலகத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி-ஸ்டாலின் நேரில் அஞ்சலி:
அவரது உடலுக்கு முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, மேயர் மா.சுப்பிரமணியன், தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக ஹைதர் அலி, மத்திய அமைச்சர் நாராயணசாமி உள்பட ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நேற்றிரவு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், கவிஞர் அறிவுமதி, இசையமைப்பாளர் தீனா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தொல்காப்பியனின் உடல் மாலையில் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு நாளை அடக்கம் செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications