தனியாக இருந்த பெண்ணுக்கு தாலி கட்ட முயற்சி-காதலன் கைது
குற்றாலம்: வீ்ட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு கட்டாய தாலி கட்ட முயன்றதாக அந்த பெண்ணின் காதலன் கைது செய்யப்பட்டார்.
குற்றாலம் அருகே உள்ள குடியிருப்பு ராமன்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருடைய மகள் பூர்னிமா. கோவிந்தசாமி இறந்து விட்டார். தற்போது பூர்ணிமா தனது தாயார் லதா உடன் வசித்து வருகிறார்.
பூர்ணிமாவும், செங்கோட்டையை சேர்ந்த பெரியசாமி மகன் ஐயப்பனும் காதலித்து வந்தனர். ஐயப்பனுக்கு பூர்ணிமா அக்காள் மகள் ஆவார். இந்த காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதையடுத்து ஐயப்பன் பெண் கேட்டு சென்றுள்ளார். ஆனால் அவருக்கு பூர்ணிமாவை பெண் கொடுக்க லதா சம்மதிக்கவில்லை.
இதனால் லதா மீது ஐயப்பனுக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது. பூர்ணிமாவை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நினைத்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் பூர்ணிமா தனியாக இருப்பதை அறிந்து ஐயப்பன் அங்கு சென்றார். உடன் செங்கோட்டை கேசி தெருவை சேர்ந்த மாரியப்பன் மற்றும் மேலும் 3 பேரை அழைத்து சென்றார்.
பூர்ணிமாவிடம் பேச்சு கொடுத்து திருமணத்திற்கு சம்மதம் கேட்டு வற்புறுத்தி இருக்கிறார். ஆனால் தன்னுடைய தாயார் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அவர் மறுத்தார்.
இதனால் பூர்ணிமாவுக்கு ஐயப்பன் கட்டாய தாலி கட்ட முயன்றதாக தெரிகிறது. ஐயப்பனை திருமணம் செய்து கொள்ளும்படி அவருடன் வந்தவர்கள் மிரட்டியதாக தெரிகிறது. இதற்கிடையே பூர்ணிமா போட்ட கூச்சலை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதை பார்த்த 5 பேரும் தப்பி ஓடினர்.
இதுகுறித்து குற்றாலம் போலீசில் பூர்ணிமா புகார் செய்தார். ஏட்டு மாரியப்பன் வழக்கு பதிவு செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஷூஜா ராணி விசாரணை நடத்தி ஐயப்பன், மாரியப்பன் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications