தமிழக மீனவர்களுக்காக போராடிய சீமான் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது
தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை வெறியர்கள் தொடர்ந்து தாக்கி வருவதைக் கண்டித்தும், இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதைக் கண்டித்தும், ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்தும் நாம் தமிழர் இயக்கம் சார்பில் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது சீமான் ஆவேசமாக பேசினார். இதையடுத்து அவர் மீது வன்முறை, பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியதாக கூறி போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் தற்போது சீமான் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் அறிவுறுத்தலின் பேரில் சென்னை மாநகர காவல்துறை பிறப்பித்துள்ளது.
இன்று காலை சீமான் அடைக்கப்பட்டுள்ள வேலூர் சிறைக்குச் சென்ற போலீஸார், அவரிடம் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டது தொடர்பான உத்தரவை வழங்கினர்.
கடந்த ஆண்டும் இதேபோல தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சீமான் அடைக்கப்பட்டார். ஆனால் அது செல்லாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் விடுதைலயானார். இந்த நிலையில் தமிழக மீனவர்களின் அவதி நிலையை குறிப்பிட்டு ஆவேசமாக பேசியதற்காக மீண்டும் அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சீமான் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்திருப்பது தமிழ் உணர்வாளர்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம், இதைக் கண்டித்து யாரேனும் போராட்டம் நடத்தினாலோ அல்லது போஸ்டர்கள் உள்ளிட்டவற்றை ஒட்டினாலோ அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறை தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாழடைந்த சிறை அறையில் சீமான் அடைப்பு
இதற்கிடையே, தன்னை பல வருடங்களாகப் பயன்படுத்தாமல் உள்ள பாழடைந்த சிறை அறையில் அடைத்து வைத்துள்ளதாக நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான் புகார் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சீமான் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்த பாழடைந்த தனி அறையில் என்னை சிறை அதிகாரிகள் அடைத்து வைத்துள்ளனர். இது சட்ட விரோதமான செயல். எனவே எனக்கு முதல் வகுப்பு அறை ஒதுக்கும்படி உத்தரவிட வேண்டும். மேலும் தனிமை சிறையை மாற்ற வேண்டும் என்றும் உத்தரவிடவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் நாகப்பன், கிருபாகரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
அப்போது அரசு கூடுதல் வக்கீல், சீமான் தனிமைச் சிறையில் வைக்கப்படவில்லை என்றார். இதுகுறித்து செவ்வாய்க்கிழமைக்குள் எழுத்துப் பூர்வமாக அரசு பதிலளிக்குமாறு கூறி நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை அன்றைக்கு ஒத்திவைத்தனர்.