மாரியம்மன் தாலி விழுந்ததாக வதந்தி-அண்ணிகளுக்கு சேலை வாங்கிக் கொடுத்த நாத்தனார்கள், கொழுந்தனார்கள்
சேலம்: சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில், அம்மன் சிலையிலிருந்து தாலி விழுந்து விட்டதாக பரவிய வதந்தியைத் தொடர்ந்து அண்ணன்களுக்கு நல்லதில்லை என்று செய்தி கிளம்பியது. இதையடுத்து பரிகாரமாக அண்ணன் மனைவிக்கு நாத்தனார்களும், கொழுந்தனார்களும் சேலை, குங்குமம், தாலிக் கயிறு கொடுத்து பரிகாரம் செய்த கூத்து நடந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் தலைவாசல் சுற்றுவட்டார கிராமங்களில், சமயபுரம் மாரியம்மன் கழுத்தில் இருந்து தாலி கழன்று கீழே விழுந்து விட்டதாகவும், அதனால் அண்ணன்களுக்கு ஆகாது; இதற்கு பரிகாரமாக அண்ணிகளுக்கு தாலி கயிறு-புடவை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்றும் தகவல் பரவியது.
இதையடுத்து கடந்த 10 நாட்களாக அந்த பகுதியே அமளி துமளியாகியுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும், அண்ணனின் மனைவிக்கு அவர்களின் நாத்தனார்களும், கொழுந்தனார்களும், சிகப்பு புடவை, தாலி கயிறு, ஜாக்கெட், குங்குமம் ஆகியவற்றை தட்டில் வைத்து கொடுத்து பரிகாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆத்தூர் மற்றும் கிட்டத்தட்ட 100 கிராமங்களில் இது நடந்து வருகிறதாம். இதனால் புடவைக் கடைகளில் சிவப்பு நிறப் புடவைக்கு செம கிராக்கியாகியுள்ளது. அதேபோல தாலிக் கயிறு, குங்குமம் விற்பனையும் சூடு பிடித்துள்ளதால் அந்தப் பகுதிகளே ஏக அமர்க்களமாக உள்ளது.
அவ்வப்போது இது போல அண்ணனுக்கு ஆபத்து, தங்கச்சிக்கு ஆபத்து என்று வதந்திகள் கிளம்புவதும், உடனே மக்கள் சிவப்புப் புடவை, பச்சைப் புடவை, மஞ்சள் புடவை என பதைபதைப்பதும் சமீபகாலமாக தமிழத்தில் அடிக்கடி நடப்பது குறிப்பிடத்தக்கது.