தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல்-அறிவித்த வேகத்தில் ரத்து
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தேர்தல் இம்மாதம் 20ம் தேதி முதல் 3 கட்டங்களாக நடைபெறும் என மாநிலத் தலைவர் கே.வி.தங்கபாலு அறிவித்த வேகத்தில் அதை ரத்து செய்துள்ளார் காங்கிரஸ் மேலிடப் பிரதிநிதியான ரவி மல்லு.
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தங்கபாலு, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் இம்மாதம் 20-ந் தேதி முதல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து 6 ஆண்டுகள் பதவி வகித்தவர்கள் மீண்டும் அதே பதவிக்கு போட்டியிட முடியாது என்றும் அவர் அறிவித்திருந்தார். தேர்தல் அட்டவணையையும் அவர் வெளியிட்டார். அதை தமிழக காங்கிரஸ் தேர்தல் ஆணையரான ரவி மல்லு வெளியிட்டிருப்பதாகவும் கூறியிருந்தார்.
ஆனால் சில மணி நேரத்தில் ரவி மல்லுவிடமிருந்து ஒரு அறிக்கை வெளியானது. அதில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, காங்கிரஸ் கட்சியின் அமைப்பு தேர்தல் நடைபெறுவதற்கு போதிய கால அவகாசம் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததின்பேரில் தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பு தேர்தல் வேறு தேதிகளில் மாற்றி வைக்கப்பட உள்ளது. புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
தேர்தல் தேதிகளை முடிவு செய்து விட்டு, அதை காங்கிரஸ் தலைவரே அறிவித்தும் விட்ட பிறகு, போதி கால அவகாசம் வேண்டும் என்று அதே காங்கிரஸ் தலைவர் கூறியதால் ரத்து செய்வதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளதால் கட்சியினர் பெரும் குழப்பமடைந்துள்ளனர்.