For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகாராஷ்டிராவில் சந்திரபாபு நாயுடு கைது-கண்டித்து ஆந்திராவில் தெலுங்குதேசம் பந்த்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: மகாராஷ்டிர மாநிலத்தில் தெலுங்கு தேச தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆந்திராவில் இன்று தெலுங்குதேசம் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது.

இந்த பந்த் காரணமாக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் கல்வீச்சு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.

மகாராஷ்டிராவில் கோதாவரி அணையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாப்லி அணையிலிருந்து மகாராஷ்டிர அரசு கூடுதல் நீர் எடுப்பதாக கூறிய சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள், எம்.பிக்கள் அங்கு சென்று பார்வையிட முயன்றனர். ஆனால் அவர்களை நான்டெட் நகரில் தடுத்து நிறுத்திய மகாராஷ்டிர அரசு அனைவரையும் கைது செய்தது.

இதையடுத்து போராட்டத்தில் குதித்த நாயுடு ஜாமீனில் விடுதலையாக மாட்டேன் என்று கூறி விட்டார். இதையடுத்து தற்போது தர்மபாத்தில் உள்ல ஐடிஐ ஒன்றில் நாயுடு உள்ளிட்டோர் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மகாராஷ்டிர அரசின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்த ஆந்திர முதல்வர் ரோசய்யா, நாயுடுவின் கோரிக்கை சரியானதே அணைப் பகுதிக்கு செல்ல நாயுடுவை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் அதை மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் நிராகரித்து விட்டார்.

இந்த நிலையில் நாயுடு கைதைக் கண்டித்து பந்த் நடத்த தெலுங்கு தேசம் கட்சி அழைப்பு விடுத்தது. இந்த பந்த்திற்கு பல பகுதிகளில் ஆதரவு காணப்படுகிறது. இருப்பினும் சில பகுதிகளில் போதிய ஆதரவு இல்லை.

மாநில அரசுப் பேருந்துகள் ஹைதராபாத்தில் பாதி அளவே ஓடின. மற்ற நகரங்களிலும் இதே நிலைதான்.

ஹைதராபாத், விசாகப்பட்டனம், விஜயவாடா, காக்கிநாடா, திருப்பதி, குண்டூர் மாவட்டங்களில் பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. சாலை மறியல், கல்வீச்சு உள்ளிட்டவற்றில் தெலுங்கு தேசம் தொண்டர்கள் ஈடுபட்டனர்.

ஹைதராபாத்தில் அரசுப் பேருந்து டிப்போக்கள் முன்பு தெலுங்கு தேசம் தொண்டர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.

ஐடி மாவட்டமான சைபராபாத்தில் இயல்பு நிலை பாதிக்கப்படவில்லை. அனைத்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் இயங்கின.

இந்த நிலையில் நாயுடு கைதைக் கண்டித்து இன்று அடிலாபாத்திலிருந்து தர்மாபாத்திற்கு பேரணியாக செல்லப் போவதாக தெலுங்கு தேசம் கட்சியினர் அறிவித்துள்ளதால் ஆந்திர-மகாராஷ்டிர எல்லைப் பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X