காஷ்மீரில் வன்முறைக்கு நடுவிலும் கால்பந்து விளையாட்டுக்கு மவுசு
உலகம் முழுவதும் கோடானு கோடி ரசிகர்களைக் கொண்ட ஒரே விளையாட்டு கால்பந்து மட்டுமே. சமீபத்தில்தான் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி கோலாகலமாக நடந்து முடிந்தது. மழை விட்டும் தூவானம் விடாத கதையாக உலகக் கோப்பைப் போட்டிகள் முடிந்த நிலையிலும் கால்பந்து மீதான ரசிகர்களின் மோகும் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
இந்த நிலையில் வன்முறைக் களமாக கிடக்கும் காஷ்மீரில் கால்பந்து விளையாட்டு மீதான மோகம் வழக்கத்தை விட அதிகமாகவே உள்ளது.
ஆண்களும் சரி, இளம் பெண்களும் சரி கால்பந்து விளையாட்டு விளையாட ஆர்வம் காட்டுகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில் கால்பந்து மீது ஆர்வம் காட்டுவோர் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் கால்பந்துக் கழகம் கூறுகிறது. மேலும் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புதிது புதிதாக கால்பந்து அணிகள் உருவாகி வருகின்றனவாம்.
இதுகுறித்து கால்பந்துக் கழக நிர்வாகிகள் கூறுகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாரம்பரிய விளையாட்டு கால்பந்து. இடையில் இது சிதைந்து போயிருந்தது. தற்போது மீண்டும் இது பெருமை பெறத் தொடங்கியுள்ளது. அணிகளின் எண்ணிக்கையும், விளையாடுவோர், ரசிகர்களின் எண்ணிக்கையும் பெருமளவில் அதிகரித்துள்ளது.
ஆரம்பத்தில் இங்கு மொத்தமே 5 கிளப்கள்தான் இருந்தன. ஆனால் தற்போது 500 கிளப்கள் வரை பெருகி விட்டன என்று அவர்கள் தெரிவித்தனர்.
கால்பந்தோடு, தீவிரவாதத்தையும் சேர்த்து உதைத்தால் காஷ்மீர் மூலம் இந்திய கால்பந்துக்கு நிச்சயம் பெருமை சேரும் என்பதில் சந்தேகமில்லை.