பென்னாகரத்தில் தேர்தல் நேர்மையாக நடந்திருந்தால் நாங்கள் ஜெயித்திருப்போம்: ராமதாஸ்
சென்னை: பென்னாகரத்தில் நடந்த தேர்தலில் தி.மு.க. நேர்மையாக இருந்திருந்தால் நாங்கள் 20 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்திருப்போம் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பூம்புகாரில் வன்னியர் மகளிர் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:
வன்னியர் என்ற சொல்லுக்கு சத்திரியன் என்பது பொருள். அத்தகைய வன்னியர் குல மக்களின் உரிமைக்காக நாம் போராடுகிறோம். இதற்காக எத்தனை தடவை வேண்டுமானாலும் சிறை செல்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். எனவே, திறந்த வெளி சிறைச்சாலை ஒன்றை கட்டுங்கள்.
சட்டமன்றத்தில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு செய்யும்படி கேட்டால் இங்கு ஜாதி பற்றி பேசலாமா என்கிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் 7 தொகுதிகளில் வெற்றி அடைந்து விட்டோம். வன்னிய சமூகம் நலிந்து, அழிந்து விட்டதாக சிலர் தவறாக எண்ணியுள்ளனர்.
பென்னாகரத்தில் நடந்த தேர்தலில் தி.மு.க. நேர்மையாக இருந்திருந்தால் நாங்கள் 20 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்திருப்போம். வன்னியர் குலத்தவருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி வரும் 28-ம் தேதி மிகபெரிய போராட்டம் நடக்க உள்ளது என்று அவர் கூறினார்.