ராதாபுரம் பஸ் நிலையத்துக்கு காமராஜர் பெயர் சூட்ட கருணாநிதி உத்தரவு
சென்னை: நெல்லை மாவட்டம் ராதாபுரம் பஸ் நிலையத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் பேருந்து நிலையம் என பெயர் சூட்ட முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில்,
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டுமென்று அந்தத் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினர் அப்பாவு எடுத்த முயற்சியின் காரணமாக ரூபாய் 77 லட்சம் செலவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
அந்தப் பேருந்து நிலையத்திற்கு பெருந் தலைவர் காமராஜர் பெயரைச் சூட்டிட வேண்டுமென்று வைக்கப்பட்ட கோரிக்கையினையேற்று முதல்வர் கருணாநிதி ராதாபுரம் பேருந்து நிலையம் என்று தற்போதுள்ள பெயரை பெருந்தலைவர் காமராஜர் பேருந்து நிலையம் என்று வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளார்.
காமராஜர் பெயரை இந்தப் பேருந்து நிலையத்திற்கு வைக்க வேண்டுமென்று சத்திய மூர்த்தி பவன் வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்த சுடலைமுத்து மற்றும் சிவாஜி முத்துக்குமார் ஆகியோர்; தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் கொடுத்த புகாரின் பெயரில் கைது செய்யப்பட்டனர். அவர்களை சிறையிலிருந்து உடனடியாக விடுவிக்கவும் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications