மதுரை அதிமுக திருமண விழா சென்னைக்கு திடீர் மாற்றம்
சென்னை: மதுரையில் ஜெயலலிதா தலைமையில் பிரமாண்டமான முறையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அதிமுக குடும்ப திருமண விழா திடீரென சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது.
கோவை அதிமுகவினர் கலக்கியதைப் போல தாங்களும் கலக்கி விடலாம் என ஆவலுடன் காத்திருந்த மதுரை அதிமுகவினர் இதனால் ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளனர்.
இந்த திடீர் மாற்றம் குறித்து, அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா 22.8.2010 அன்று மதுரையில் கழக தொண்டர்களின் இல்லத்திருமணங்களை தலைமை ஏற்று நடத்தி வைப்பார் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
தற்போது அதில் சிறிய மாறுதல் செய்யப்பட்டு, ஜெயலலிதா 22.8.2010 அன்று காலை 10.30 மணி அளவில், சென்னை, வானகரம், வேலப்பன்சாவடி அருகில் சென்னை பெங்களூர் மெயின் சாலை ரோடு பந்தலில் கழக தொண்டர்களின் இல்லத் திருமணங்களை தலைமை ஏற்று நடத்தி வைப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் நடைபெறும் இந்த திருமண விழாவை பிரமாண்டமாக நடத்தி பெரும் கூட்டத்தைத் திரட்டிக் காட்டி, கோவையில் திமுகவினருக்கு கொடுத்த அதிர்ச்சியைப் போல தாங்களும் அதிர்ச்சி வைத்தியம் அளிக்க அதிமுகவினர் ஆர்வமாக இருந்தனர்.
இதற்காக விரகனூர் அருகே மிகப் பெரிய அளவில் பந்தல் அமைக்கவும் ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி கடந்த 15ம் தேதி ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன் உள்ளிட்டோர் முன்னிலையில் நடந்தது.
திருமண விழாவுக்கான பந்தல் பெரும் பிரம்மாண்டமாக அமைக்கப்படுவதாகவும், ஒரு லட்சம் பேர் பங்கேற்ற போவதாகவும் அதிமுக நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். இந்த விழாவில் தென் மாவட்ட அதிமுகவினர் பெரும் திரளாக திரண்டு வரவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது திடீரென சென்னைக்கு விழாவை மாற்றியிருப்பதால் தென் மாவட்ட அதிமுகவினர் ஏமாற்றமடைந்துள்ளனர்.
ஒரு வேளை தலைநகரில் வைத்து எதிர்த்தரப்புக்கு தலைவலி கொடுக்கலாம் என அம்மா திட்டமிட்டுள்ளாரோ என்னவோ...












Click it and Unblock the Notifications