மொழிப் பிரச்சினை தீர்ந்ததால் உற்சாகம்-ஒரு மாதம் டெல்லியில் அழகிரி முகாம்
ஆங்கிலம் மற்றும் இந்தியில் பேசுவதில் சிக்கல் ஏற்பட்டதால் லோக்சபா மற்றும் ராஜ்யசபா கூட்டங்களுக்குப் போகாமல் இருந்து வந்தார் மு.க.அழகிரி. இதை எதிர்க்கட்சிகள் பெரும் பிரச்சினையாக்கின.
தான் தமிழில் பேசுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என மு.க.அழகிரி விடுத்த கோரிக்கையை நாடாளுமன்ற செயலகம், விதிமுறையைக் காரணம் காட்டி மறுத்து விட்டது.
இதனால் பெரும் இழுபறியாக இருந்து வந்தது அழகிரிப் பிரச்சினை. இந்த நிலையில் சமீபத்தில் புதிய தீர்வு ஒன்றை சபாநாயகர் மீரா குமார் வைத்தார். அதன்படி மெயின் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதிலை எழுதி வைத்துக் கொண்டு அதை அழகிரி வாசிக்கலாம். துணைக் கேள்விகளுக்கு இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா பதிலளிப்பார் என தெரிவிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக இழுபறியாக இருந்து வந்த இந்த மொழிப் பிரச்சினை முடிவுக்கு வந்திருப்பது திமுகவுக்கும் நிம்மதியைக் கொடுத்துள்ளது.
இதையடுத்து வருகிற மழைக் காலக் கூட்டத் தொடரை அழகிரி தைரியமாக சந்திக்கவுள்ளார். மேலும் முழுத் தொடரிலும் பங்கேற்கவும் அவர் தீர்மானித்துள்ளார். அமைச்சர் பதவி ஏற்றுக் கொண்ட பின்னர் அழகிரி ஒரு முழுத் தொடரிலும் பங்கேற்கவுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் 26 ம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் துவங்குகிறது. இதில் அழகிரி பங்கேற்கிறார். கூட்டத் தொடர் முழுவதிலும் பங்கேற்க திட்டமிட்டுள்ளதால் ஒரு மாதம் வரை அழகிரி டெல்லியில்தான் முகாமிட்டிருப்பார்.