தமிழகம் முழுவதும் பரவலாக மழை24 மணி நேரத்திற்கு நீடிக்கும்
தமிழகம் முழுவதும் பரவலாக மழை24 மணி நேரத்திற்கு நீடிக்கும்
சென்னை: தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் இன்று நல்ல மழை பெய்து வருகிறது. இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது கேரளாவிலும், கர்நாடகத்திலும் தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதன் எதிரொலியாக இந்த மாநிலங்களையொட்டியுள்ள தமிழக பகுதிகளிலும் மழை பெய்துவருகிறது. இது போக வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது.
சென்னையில் நேற்று இரவு லேசான மழை பெய்தது. இன்றுகாலை முதல் வானம் மேக மூட்டமாக இருக்கிறது. லேசான தூறல் பல இடங்களில் காணப்பட்டது.
இதேபோல தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும், உட்புறப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது, பெய்து வருகிறது. இந்த மழை 24 மணி நேரத்திற்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திலும், புதுச்சேரியிலும் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் மழைக்கு 3 பேர் பலி
வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கன மழை பெய்தது. இந்த மழைக்கு 3 பேர் பலியானார்கள்.
வேலூர் சத்துவாச்சாரியை அடுத்த பெருமுகை மறைமலைநகரைச் சேர்ந்தவர் கணேசன். இவர் ஒரு கூலி தொழிலாளி. இவருக்கு நந்தினி (வயது 9), ஜீவா (5) என்ற 2 மகள்கள். கடந்த 3 நாட்களாக பெய்த கன மழையால் இவரின் குடிசை சுவர் இடிந்தது. இதில் இவரின் மகள் நந்தினி பரிதாபமாக உயிர் இழந்தாள்.
குடியாத்தம் அடுத்த புட்டவாரிபல்லி ஜி.கே.ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் (வயது 22), ராமலிங்கம் (45), நல்லாகவனியுரைச் சேர்ந்த சிங்காரம் (40), கொட்டாகுளம் சந்திரன் (47) ஆகியோர் காட்டில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர். மாலையில் வீடு திரும்பும் போது மழை பெய்ததால் காட்டுப் பகுதியில் ஒதுங்கி நின்றனர். அப்போது மின்னல் தாக்கி பச்சையப்பனும், ராமலிங்கமும் அந்த இடத்திலேயே கருகிச் செத்தனர். படுகாயம் அடைந்த மற்ற இருவரும் குடியாத்தம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications