ஐந்து மடங்கு உயர்கிறது எம்.பி.க்களின் சம்பளம்: நிறைவேறவுள்ளது மசோதா

நாட்டில் பணவீக்கம், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு என ஏகப்பட்ட பிரச்சினை. மக்களுக்கு அவதி, எதிர்க்கட்சிகளின் போராட்டம் என ஏக அமளி.
மறுபக்கம் மத்திய அரசு மின்னல் வேகத்தில் ஒரு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. மேற்கண்ட பிரச்சினைகளைத் தீர்க்கும் நடவடிக்கை அல்ல அது- நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தும் நடவடிக்கைதான் அது.
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 795 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களின் தற்போதைய மாதச் சம்பளம் ரூ. 16 ஆயிரம்.
இந்த சம்பளம் கடந்த 10 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கான ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வந்தன.
ஒரு ரூபாயாவது கூட வேணும்...!
இதன்படி, மத்திய அரசின் அமைச்சரவை செயலர்களின் சம்பளம் 80 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதையடுத்து அமைச்சரவை செயலர்களை விட, தங்களின் சம்பளம் அதிகபட்சம் ஒரு ரூபாயாவது கூடுதலாக இருக்க வேண்டும் என எம்.பி.க்களின் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இது குறித்து ஆய்வு செய்ய காங்கிரஸ் எம்.பி. சரண் தாஸ் மகந்த் தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு, எம்.பி.,க்களின் சம்பளத்தை 16 ஆயிரம் ரூபாயிலிருந்து 80 ஆயிரத்து ஒரு ரூபாயாக (ஐந்து மடங்கு) உயர்த்த வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.
தினசரி ரூ. 2000 படி
இதுமட்டுமின்றி நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடக்கும்போது எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் தினப்படியை தற்போதுள்ள 1,000 ரூபாயிலிருந்து, 2,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும், இதே போன்று, எம்.பி.க்களின் தொகுதி செலவு நிதி, அலுவலகச் செலவு நிதி ஆகியவற்றையும் உயர்த்த வேண்டும் என்றும் அந்த குழு பரிந்துரைத்துள்ளது.
முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றம்
இந் நிலையில், வரும் 26-ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் துவங்க உள்ளது. இந்த கூட்டத் தொடரிலேயே எம்.பி.க்களின் சம்பள உயர்வு தொடர்பான மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications