சிறுவனைக் கொன்றதாக கைதான பூவரசி மீது சிறையில் தாக்குதல்
சென்னை: சிறுவன் ஆதித்யாவை கொடூரமாகக் கொலை செய்ததாக கைதான இளம் பெண் பூவரசி மீது சிறைக்குள் பெண் கைதிகள் சரமாரியாக தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை விரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரைக் காதலித்து வந்த பூவரசியை ஏற்க ஜெயக்குமார் மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த பூவரசி, ஜெயக்குமாரின் மூன்றரை வயது மகன் ஆதித்யாவை கொடூரமாகக் கொலை செய்து சூட்கேஸில் உடலை வைத்து புதுச்சேரியில் விட்டு விட்டு வந்தார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட பூவரசி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை உணவு வாங்குவதற்காக பெண் கைதிகள் அனைவரும் வரிசையில் காத்திருந்தனர்.அப்போது அங்கு பூவரசியும் தட்டோடு வந்தார். அவரைப் பார்த்த பெண் கைதிகள், பூவரசியை சுற்றி சூழ்ந்து கொண்டு தட்டுகளை அவர் மீது அடித்தும், சரமாரியாக எரிந்தும் கடுமையாக தாக்கினர்.
இதில் பூவரசிக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக விரைந்து வந்த சிறை அதிகாரிகள் கைதிகளை விலக்கி விட்டு பூவரசியை மீட்டு அங்கிருந்து கொண்டு சென்றனர்.
சிறைக்குள் பெண் கைதிகள் நடத்திய இந்த திடீர் தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications