சோராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கு-குஜராத் அமைச்சருக்கு சிபிஐ சம்மன்-கைதாவாரா?
இதுகுறித்து சிபிஐ ஐஜி கந்தசாமி கூறுகையில், காந்தி நகர் சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்கு இன்று ஆஜராகுமாறு அமீத் ஷாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
கடந்த சில நாட்களாகவே அமீத் ஷா ஒதுங்கியே இருந்து வருகிறார். அமைச்சரவைக் கூட்டங்களுக்கு அவர் வருவதில்லை. கட்சி அலுவலகத்திற்கும், தனது அலுவலகத்திற்கும் கூட அவர் வருவதில்லை. நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்கும் கூட அவர் வரவில்லை.
இதன் மூலம் இன்றைய விசாரணைக்குப் பின்னர் அவர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு சோராபுதீன் ஷேக் மற்றும் அவரது மனைவியை கைது செய்த குஜராத் போலீஸார் அவர்கள் நரேந்திர மோடியைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாகவும், போலீஸாரைத் தாக்கி தப்ப முயன்றதாகவும் கூறி போலியான என்கவுன்டரில் கொன்று விட்டனர் என்பது குற்றச்சாட்டு. இந்த வழக்கில் அமீத் ஷாவும் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.