குலசேகரத்தில் மர்மக் காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி
குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் இறந்தான்.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. மார்த்தாண்டம் கல்லூரி மாணவி ஜிசாமோள் சந்திரா டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்தார். உதயமார்த்தாண்டம் அருகே எள்ளுவிளையை சேர்ந்த மரிய ரத்தினம் பன்றி காய்ச்சலால் நேற்று இறந்தார்.
இதனால் மாவட்டத்தில் பொதுமக்களிடையே மீண்டும் மர்ம காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குலசேகரம் அருகே உண்ணியூர்கோணத்தை சேர்ந்த பள்ளி மாணவர் மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
உண்ணியூர்கோணத்தை சேர்ந்தவர் வர்கீஸ், இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜான்சி. இவரது மகன் ஜோசன், ஜோன், என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். ஜோசன் உண்ணியூர்கோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார்.
இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. தொடர்ந்து இவருக்கு பள்ளியாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிக்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்ற ஜோசனுக்கு திடீரென வாந்தி ஏற்பட்டது. உடனடியாக இவரை பள்ளியாடியில் முதலில் சிகிச்சை பெற்ற மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் ஜோசனை உயர் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினர்.
உடனடியாக ஜோசனை சாமியார்மடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜோசஸ் இறந்தான். இச்சம்பவம் உண்ணியூர்கோணம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.