உள்துறைச் செயலாளர் ஜி.கே. பிள்ளைக்கு எஸ்.எம்.கிருஷ்ணா கண்டனம்

மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கு தொடர்பு உள்ளதாக பேச்சுவார்த்தைக்காக இஸ்லாமாபாதுக்கு எஸ்.எம்.கிருஷ்ணா செல்வதற்கு முந்தைய தினம் உள்துறைச் செயலாளர் ஜி.கே.பிள்ளை கருத்துத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து கிருஷ்ணாவை அவமதிக்கும் வகையில் பாகி்ஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி நடந்து கொண்டார். கிருஷ்ணாவை உடன் வைத்துக் கொண்டே ஜி.கே. பிள்ளையையும் தீவிரவாதி ஹெட்லியையும் ஒப்புமைப்படுத்தி கருத்துத் தெரிவித்தார்.
மேலும் கிருஷ்ணா சரியான ஹோம் ஒர்க் செய்து கொண்டு பேச்சு நடத்த வரவில்லை என்றும் வாரினார். பிள்ளையின் கருத்தால் கடுப்பானதால் தான் பாகி்ஸ்தான் அமைச்சர் இவ்வாறு பேசுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து தனது பேச்சுக்கும் பாகிஸ்தான் அமைச்சரின் செயலுக்கும் தொடர்பில்லை என்று பிள்ளை கருத்துத் தெரிவித்தார்.
பிள்ளையின் செயலால் கடுப்பான பிரதமர், உள்துறையின் கருத்துக்களை செய்தித் தொடர்பாளர் மூலம் வெளியிடுமாறு அந்தத் துறையின் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்த செய்தித் தொடர்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, ஜி.கே.பிள்ளையின் கருத்துகள் உண்மையானவைதான். ஆனால், அதை அதை தெரிவித்த நேரம் சரியானதல்ல.
அந்த நாட்டுடன் அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை தொடங்க இருந்த நிலையில் பிள்ளை அதுபோன்று கருத்து தெரிவித்திருக்கக் கூடாது. நான் நாடு திரும்பிய பிறகு தனது கருத்தை அவர் சொல்லியிருக்கலாம்.
பிள்ளைக்கு பதிலாக இப்போது செய்தித் தொடர்பாளரை நியமித்திருப்பது வரவேற்கத்தக்கது. எப்படியானாலும் பாகிஸ்தானுடன் நான் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி என கூறமுடியாது.
அதே போல பாகிஸ்தான் அமைச்சர் நடந்து கொண்ட விதமும், பலுசிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவின் பெயரை தேவையில்லாமல் இழுத்து அவர் பேசியதும் சரியல்ல என்றார் கிருஷ்ணா.
இதன்மூலம் இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை சூழலை கெடுத்தது பிள்ளை தான் என்பதை மறைமுக குற்றச்சாட்டாகவே கூறிவிட்டார் கிருஷ்ணா.
ஹெட்லி வாக்குமூலம் லீக்-இந்தியாவுக்கு யுஎஸ் எதிர்ப்பு:
இந் நிலையில் ஹெட்லியிடம் அமெரிக்காவில் இந்திய அதிகாரிகள் நடத்தியபோது கிடைத்த விவரங்களை கசிய விட்டதற்கு அந்நாடு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
மும்பை தாக்குதலுக்கு தொடக்கம் முதல் முடிவு வரை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. தான் காரணம் என்று ஹெட்லி கூறியதாக மத்திய உள்துறைச் செயலாளர் ஜி.கே. பிள்ளை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனும் ஆகியோர் தெரிவித்துள்ளன்.
ஹெட்லி கூறிய தகவல்களை இந்த அதிகாரிகள் வெளியே கூறியதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் குரோவ்லி கூறுகையில்,
தீவிரவாதத்தை ஒழிப்பதில் அமெரிக்கா, இந்தியாவுடன் இணைந்து செயல்படுகிறது. ஆனால் ஹெட்லி தொடர்பான விசாரணை தகவல்கள் வெளிப்படையாக கூறப்படுகின்றன. இதில் ரகசியங்கள் காப்பாற்றப்பட வேண்டும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இரு நாடுகளுக்கும் இதில் பொறுப்புகள் இருக்கின்றன என்றார்.












Click it and Unblock the Notifications