தமிழ்நாடு வணிகர் பேரவை இரண்டாக உடைந்தது: வெள்ளையன் நீக்கப்பட்டதாக அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு வணிகர் பேரவை இரண்டு பிரிவாக உடைந்துவிட்டது. இந்த அமைப்பின் தலைவர் வெள்ளையன் நீக்கப்பட்டுவிட்டதாக போட்டி பேரவை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை வெள்ளையன் தலைமையில் செயல்பட்டு வந்தது. கடந்த சில வருடங்களாக அரசுக்கு எதிராக போராட்டம், தேர்தலில் வணிகர் பேரவை நேரடியாக ஈடுபட்டது போன்ற சம்பவங்களால் நிர்வாகிகளிடையே கருத்து வேறுபாடு உருவானது.
இந் நிலையில் தென் சென்னை மாவட்டத் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் ஒரு அணியினர் வெள்ளையனுக்கு எதிரானவர்களைத் திரட்டி, மதுரையில் போட்டி கூட்டம் நடத்தி, வெள்ளையனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர்.
இதையடுத்து விக்கிரமராஜாவை பதவியில் இருந்து நீக்கினார் வெள்ளையன்.
இதையடுத்து விக்கிரமராஜா அணியினர் திருச்சியில் நேற்று போட்டிக் கூட்டம் நடத்தினர். அதில், பேரவைத் தலைவர் பதவியில் இருந்து வெள்ளையனை தற்காலிகமாக நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு்ள்ளது.
பேரவைக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க அனைத்து மாவட்ட வணிகர் சங்க நிர்வாகிகள் கூட்டம் வருகிற 27ம் தேதி காலையில் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடக்கும் என்று இந்த கோஷ்டி அறிவித்துள்ளது.
இதன்மூலம் வணிகர் பேரவை இரண்டாகி வெள்ளையன் தலைமையில் ஒரு அணியும், விக்கிரமராஜா தலைமையில் மற்றொரு அணியும் உருவாகியுள்ளன.