நாடு தழுவிய போராட்டத்திற்கு தயராகும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கம்
கோவையில், பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்த அமைப்பின் அகில இந்திய பொதுச் செயலாளர் பி. அபிமன்யு கலந்து கொண்டார்.
பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இந்தியாவில் மட்டும் அல்ல உலகிலேயே மிக குறைந்த கட்டணத்தில் மொபைல் சேவை அளித்து வரும் ஒரே நிறுவனம் பி.எஸ்.என்.எல். நிறுவனம் மட்டுமே. பி.எஸ்.என்.எல். என்ற ஒரு அரசு நிறுவனம் இருந்தால் தான் தனியாரின் கவர்ச்சிக் கொள்ளையைத் தடுக்க முடியும்.
இந்த நிறுவனம் கடந்த 2004 - 05 ம் ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ10 ஆயிரம் கோடி நிகர லாபம் ஈட்டியது. ஆனால் நிறுவனத்தை நலிவடையச் செய்த பின்பு தனியார் மயமாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
எனவே, இதனைக் கண்டித்து வரும் அக்டோபர் மாதம் 19 , 20 , 21 ஆகிய மூன்று நாட்கள் அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
பேட்டியின் போது தமிழ்நாடு மாநிலச் செயலாளர் எஸ். செல்லப்பா, மாநிலத் தலைவர் கே.மாரிமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.