தமிழக கேரள எல்லையில் பன்றி காய்ச்சலுக்கு கணவன்-மனைவி பலி
தென்மலை: தமிழக-கேரள எல்லைபகுதியில் பன்றி காய்ச்சலுக்கு கணவன்-மனைவி அடுத்தடுத்து பலியாகினர்.
கேரள மாநிலத்தில் கடந்த மாதத்தில் இருந்து பன்றி காய்ச்சல் பல்வேறு மாவட்டங்களில் பரவியது. இதில் பலர் பாதிக்கப்பட்டு மருத்து சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்நோயின் தாக்குதலில் இதுவரை இம்மாநிலத்தில் 90க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 1800க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தென்மலை பகுதியை சேர்ந்த சந்திரபாபு என்பவர் கடந்த வாரம் இந்நோய் தாக்கி பலியானார். நேற்று இவரது மனைவி விஜி என்பவரும் இந்நோய் தாக்குதலில் பலியானார்.
அவரது உடல் இடப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது. தமிழக-கேரள எல்லை தென்மலையில் பன்றி காய்ச்சலால் அடுத்தடுத்து கணவன்-மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications