நாம் தமிழர் தலைவர் சீமானின் சிறைக் காவல் நீட்டிப்பு
சென்னை: நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமானின் சிறைக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஈழத் தமிழர்களையும், தமிழகத் தமிழர்களையும் தொடர்ந்து தாக்கி வரும் இலங்கை அரசையும், இலங்கை கடற்படையையும் கண்டித்து நாம் தமிழர் அமைப்பின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது சீமான் ஆவேசமாக பேசினார். சிங்களர்களுக்கு எச்சரிக்கை விடுத்துப் பேசினார்.
இதையடுத்து வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக கூறி போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டமும் பிரயோகிக்கப்பட்டது.
நேற்று சீமான் காவல் நீட்டிப்புக்காக ஜார்ஜ்டவுன் கோர்ட்டுக்குக் கொண்டு வரப்பட்டார். அப்போது ஆகஸ்ட் 6ம் தேதி வரை காவலை நீட்டித்து மாஜிஸ்திரேட் சாந்தி உத்தரவிட்டார். இதையடுத்து பாதுகாப்புடன் சீமானை வேலூர் சிறைக்கு போலீஸார் கொண்டு சென்றனர்.
முன்னதாக கோர்ட்டுக்கு சீமான் கொண்டு வரப்பட்டபோது போலீஸாரைக் கண்டித்து நாம் தமிழர் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.