தமிழக வளர்ச்சிப் பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தினேன்: மு.க.ஸ்டாலின்
சென்னை: டெல்லியில் நடந்த முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக வளர்ச்சிப் பணிகளுக்காக கூடுதல் நிதி ஒதுக்கும்படி மத்திய அரசை வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
விஷமாய் ஏறும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது குறித்த முதல்வர்கள் மாநாடு டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நேற்று நடந்தது. இதில் தமிழக அரசின் சார்பாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விட்டு நேற்று இரவு சென்னை திரும்பினார்.
விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:
டெல்லியில் நடந்த முதலமைச்சர்கள் மாநாட்டில், தமிழகத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் காப்பீட்டு திட்டம், வீட்டு வசதி திட்டம், பொது விநியோக திட்டம் ஆகிய திட்டங்கள் சிறந்த முறையில் செயல்பட்டு வருவதை எடுத்துரைத்தேன். இந்த திட்டங்களை பிற மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தலாம் என்று ஆலோசனை அளித்தேன். வளர்ச்சிக்கு உதவும் இந்த திட்டங்களை மேலும் சிறப்பாக செயல்படுத்த தமிழகத்திற்கு கூடுதல் நிதி வழங்கும்படி வலியுறுத்தினேன்.
கல்வி மற்றூம் சுகாதாரத் துறையில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்வதை கூறியபோது பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
தேசிய நதிகள் அனைத்தையும் இணைக்க வேண்டும் என மாநாட்டில் கூறினேன். இதில் முதல் கட்டமாக தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்றும், தமிழக நதிகளை இணைப்பதற்கு ஆகும் செலவை மத்திய அரசே ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்தேன்.
கடலோர பாதுகாப்பு பணியை மேலும் பலப்படுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செய்வதற்கான் முழுப்பொறுப்பையும் மத்திய அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், பாரதப் பிரதமர் கிராமச் சாலை திட்டத்தில் தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும், புதிய மின் நிலையங்களுக்கு மத்திய அரசு கூடுதலாக நிலக்கரி வழங்க வேண்டும் என்றும், கூடங்குளத்தில் விரைவில் மின் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்.
மேலும், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நகர்ப்புற வளர்ச்சித்திட்டங்கள், ரயில்வே திட்டங்கள், துறைமுக அபிவிருத்தி திட்டம் போன்ற திட்டங்களுக்கும், தமிழகத்தின் மற்ற வளர்ச்சி திட்டங்களுக்கும் கூடுதல் நிதி ஒதுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தினேன் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications