வாக்காளர் பட்டியல் பணிக்கு கூடுதல் ஊழியர்களை நியமிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
கன்னியாகுமரி: வாக்காளர் பட்டியலில் உள்ள ஒவ்வொரு பாகத்திற்கும் ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு துறைகளில் இருந்து ஊழியர்களை நியமிக்கும் பணி நடந்து வருகிறது.
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள தமிழக சட்டமன்ற பொது தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே வாக்கு சாவடி வாரியாக பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, பெயர் சேர்க்கை, நீக்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.
வாக்காளர் பட்டியல் பாகம் வாரியாக பிரிக்கப்பட்டிருக்கும். வாக்காளர் எண்ணிக்கையை பொறுத்து ஒரே வாக்கு சாவடிக்கு 2 பாகங்களும், 1 பாகத்திற்கு 2 வாக்கு சாவடிகளும் அமைக்கப்பட்டிருக்கும். தற்போது ஒரு வாக்கு சாவடிக்கு ஒரு அதிகாரி இருந்தாலும், காலியிடங்களை கூடுதலாக கவனித்து வருகிறார்.
இதை தேர்தல் ஆணையம் அனுமதிக்கவில்லை. ஒரு பாகத்திற்கு ஒரு அதிகாரி கண்டிப்பாக நியமிக்க வேண்டும். கூடுதல் பொறுப்பில் யாரும் இருக்க கூடாது என சமீபத்தில் கலெக்டர்கள் பங்கேற்ற கூட்டத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து வாக்காளர் பட்டியல் பணியில் காலியிடங்களை நிரப்பும் பணி தற்போது மாவட்டம் வாரியாக நடந்து வருகிறது.
சத்துணவு, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து ஊழியர்கள் இப்பணியில் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இப்பணி முடிந்ததும் தொகுதி வாரியாக அலுவலர்கள் கூட்டம் கலெக்டர் தலைமையி்ல் நடக்கிறது.