ஒன்றரை வயதுக் குழந்தை நரபலி-மந்திரவாதி மனைவியுடன் கைது
ராமநாதபுரம்: ஒன்றரை வயதுக் குழந்தையை கடத்திச் சென்று நரபலி கொடுத்த மந்திரவாதி மனைவியுடன் கைது செய்யப்பட்டார்.
மதுரை அருகே உள்ள எஸ்.ஆலங்குளத்தை சேர்ந்தவர் கவுஸ் பாட்சா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன் விபத்தில் உயிர் இழந்தார். கணவனின் பிரிவை தாங்க முடியாத அவர் மனைவி சிரின் பாத்திமா மன அமைதியை தேடி தன் ஒன்றரை வயதுக் குழந்தை காதர் யூசுப்புடன் மதுரையில் உள்ள கோரிப்பாளையம் தர்காவில் தங்கி இருந்தார்.
அங்கு தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த அப்துல் கபூர் என்ற மந்திரவாதியும், அவர் மனைவி ரமலா பீவியுடன் தங்கி இருந்தார்கள். சிரின் பாத்திமாவின் நிலையைப் பற்றி தெரிந்து கொண்ட அந்த மந்திரவாதி அவர் மீது பரிதாப்படுவது போன்றும், குழந்தையிடம் அன்புடன் பழகுவது போன்றும் நடித்துள்ளார்.
கடந்த வாரம் சிரின் பாத்திமா தனது குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு தானும் தூங்கியுள்ளார். அவர் தூங்கி எழுந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை.
இது குறித்து சிரின் பாத்திமாவின் உறவினர்கள், தல்லாகுளம் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, மந்திரவாதி அப்துல் கபூரும், அவருடைய மனைவியும் தான் குழந்தையை கடத்திச் சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து மந்திரவாதி அப்துல் கபூரையும், அவர் மனைவி ரமலா பீவியைவையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் குழந்தையை கடத்திச் சென்று நரபலி கொடுத்து விட்டதாக கூறினர்.
கோரிப்பாளையம் தர்காவில் அந்த மந்திரவாதி தங்கி இருந்தபோது அவர் கண்ட கனவில், தலைப்பிள்ளையாக பிறக்கும் ஆண் குழந்தையை நரபலி கொடுத்து அதன் ரத்தத்தை குடித்தால் மாந்திரீக சக்தி அதிகரிக்கும் என்று அசரீரி கூறியதாக தெரிவித்தார். இதையடுத்து அவரும், அவர் மனைவியும் சேர்ந்து குழந்தை காதர் யூசுப்பை காயல்பட்டினம் அருகே உள்ள ஏரல் கிராமத்திற்கு கடத்தித் சென்றுள்ளனர்.
அங்கு குழந்தையை துண்டுதுண்டாக வெட்டி 2 பெரிய தூக்குவாளிகளில் அடைத்துள்ளனர். குழந்தையின் இரத்தத்தை சேகரித்துள்ளனர். அதன் பின்னர், குழந்தையின் உடலையும், இரத்தத்தையும் எடுத்துக் கொண்டு குலசேகரன்பட்டினம் செல்லும் வழியில் உள்ள கல்லாமொழி கடற்கரைக்கு சென்றுள்ளனர்.
அங்கு குழந்தையின் ரத்தத்தை குடித்து அந்த மந்திரவாதி பரிகாரம் செய்துள்ளார். பிறகு குழந்தையின் தலையை அங்கேயே புதைத்துவிட்டு, ஏர்வாடியை அடுத்த காட்டுப்பள்ளிக்கு சென்று குழந்தையின் உடல் பாகங்களை புதைத்துள்ளனர். இந்த தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து நேற்று காலை தல்லாகுளம் போலீசார் மந்திரவாதியுடன் ஏர்வாடிக்கு சென்று குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை தோண்டிப் பார்த்தனர். அங்கு குழந்தையின் உடல் இருப்பதை பார்த்த பின் அவர்கள் மீண்டும் மூடிவிட்டனர்.
குழந்தையின் தலை புதைக்கப்பட்டிக்கும் கல்லாமொழி கிராமத்திற்கு போலீசார் விரைந்துள்ளனர். அங்கு தலையை கைப்பற்றியபின், ஏர்வாடியில் புதைக்கப்பட்ட உடலை இன்று மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications