தூத்துக்குடி தனியார் தொழிற்சாலையில் ரூ. 746 கோடி வரி ஏய்ப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி தனியார் தொழிற்சாலை ஒன்றில் ரூ. 746 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளதை கலால் வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக அந்நிறுவன துணை தலைவர் வரதராஜனை கைது செய்தனர்.
தூத்துக்குடி சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் கலால் வரிதுறை கமிஷனர் கண்ணன், உதவி கமிஷனர் ஞானசேகரன், கண்காணிப்பாளர்கள் தனபாலன், ராஜா கிளைமாக்ஸ் உள்ளிட்டோர் திடீர் சோதனை நடத்தினர். இதில் அந்நிறுவனம் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியில் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து அதிகாரிகள் அந்நிறுவன துணை தலைவரிடம் விசாரணை நடத்தினர்.
அந்நிறுவனம் தாமிர தாதுவை இறக்குமதி செய்து அதனை பயன்படுத்தி தாமிர தகடு, ஒயர் உள்ளிட்டவற்றை தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறது. இதற்காக சில நிபந்தனைகளின் அடிப்படையில் வரி சலுகைகளையும் பெற்று வருகிறது. இந்த சலுகைகளை பெற்றதில் விதிமுறைகளை மீறி வரி ஏய்ப்பு செய்து உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்து வந்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அத்தொழிற்சாலை ஏற்றுமதி வரியை முறையாக செலுத்தாமல் ரூ. 746 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்நிறுவனத்தின் துணை தலைவர் வரதராஜன் மீது 1962-ம் ஆண்டு சுங்க இலாகா சட்டம் 135(1), (3)டி மற்றும் 132 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் தூத்துக்குடி முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பொறுப்பு நீதிபதி ராணி முன்பு ஆஜர்படுத்தினர். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வரதராஜன் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications