பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியை குறைக்க திமுக அரசு மறுப்பதேன்? விஜயகாந்த் கேள்வி
சென்னை: டெல்லி, ஆந்திராவில் எல்லாம் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியைக் குறைக்கும்போது திமுக அரசு மட்டும் இதைச் செய்ய தொடர்ந்து மறுத்து வருவது ஏன் என்று கேட்டுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஏற்கனவே பல மடங்கு விலைவாசி அதிகரித்துள்ளது போதாது என்று, இந்திய அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியது. தற்போதைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.55.50 என்றால், அதன் அடக்க விலை ரூ.20 தான். அரசுகள் விதிக்கும் வரிகள் ரூ.36 ஆகும். கடந்த ஆண்டு மட்டும் ரூ.1,80,000 கோடி இத்தகைய வரி விதிப்பின் மூலம் அரசுகளுக்கு லாபம் கிடைத்துள்ளது.
இந்தியாவிலேயே தி.மு.க அரசுதான் பெட்ரோலியப் பொருட்களின் மீது உயர்ந்தபட்சமாக வரி விதிக்கிறது. தமிழ்நாட்டில் பெட்ரோலுக்கு லிட்டருக்கு 30 சதவிகிதமும், டீசலுக்கு லிட்டருக்கு 21.43 சதவிகிதமும் என்று முதல்வரே ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் இதர மாநிலங்களில் நுழைவு வரி, கூடுதல் வரி, செஸ் வரி என்பனவற்றை எல்லாம் கூட்டியும் கூட 30 சதவிகிதத்திற்கு மேல் வரவில்லை.
டெல்லியில் 20 சதவிகிதமாக இருந்த விற்பனை வரியை, தற்பொழுது 12.5 சதவிகிதமாகக் குறைத்துள்ளனர். இதனால் டீசல் விலை இன்னும் குறைந்துள்ளது. ஆந்திர மாநிலமும் விலை கூடாமல் பார்த்துக் கொண்டுள்ளது. அப்படியிருக்க, அதிகபட்சம் வரி விதிக்கும் தி.மு.க அரசு மட்டும் விற்பனை வரியை குறைக்க மறுப்பானேன்?
தமிழ்நாடு அரசுக்கு பெட்ரோலியப் பொருட்களின் மீது வரி விதிப்பதின் மூலம் ரூ.6320 கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலை உயர்வால் கூடுதலாக ரூ.500 கோடி அளவிற்கு இந்த லாபம் உயரும். இந்த எதிர்பாராத லாபத்தையாவது தி.மு.க அரசு குறைக்க முன் வந்திருக்கலாம் அல்லவா?
விலைவாசி உயர்வால் ஏற்கனவே அவதிப்படும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை சீர்குலைக்கும் வகையில், பெட்ரோலியப் பொருட்களின் மீது அதிகபட்ச வரி விதித்தும், அவற்றை குறைக்க மறுக்கும் தி.மு.க அரசை கண்டித்து தே.மு.தி.க நடத்தும் தொடர் ஆர்ப்பாட்டத்தின்படி அடுத்தகட்டமாக கோவையில் வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் செஞ்சிலுவை சங்கம் முன்பு, தே.மு.தி.க. துணைச் செயலாளர் எஸ்.ஆஸ்டின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.











Click it and Unblock the Notifications