உங்கள் வீடு-கார் லோன் வட்டி உயரும்!
அதே போல வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டி விகிதம் (reverse repo rate) 0.50 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் வங்கிகளிடம் நிதிப் புழக்கம் குறையும். இதன் காரணமாக வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன், கார், இரண்டு சக்கர வாகனங்கள், பர்சனல் லோன் ஆகியவற்றுக்கான வட்டி விகிதம் மீண்டும் உயரவுள்ளது.
சந்தையில் (வங்கிகளிடம் உள்ள பணம்) பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தினால் தான் பண வீக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதித்துறை தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் ரிசர்வ் வங்கியில் வங்கியில் கட்டாயம் முதலீடு செய்திருக்க வேண்டிய தொகையில் (cash reserve ratio-CRR) எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்த நடவடிக்கைகளால் வங்கிகளிடம் நிதிப் புழக்கம் குறைந்துவிடும். இதனால் இருக்கும் பணத்தை அதிக வட்டிக்கு கடன் தரும் நிலைக்கு வங்கிகள் தள்ளப்பட்டுள்ளன. இதனால் கார், வீடு, இரு சக்கர வாகனம் உள்ளிட்டவற்றுக்கு வங்கிகள் தரும் கடன் தொகைக்கான வட்டி உயரவுள்ளது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவே-பிரணாப் முகர்ஜி:
பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தவே ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதாகவும் இதனால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படாது என்றும் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
நிருபர்களிடம் பேசிய முகர்ஜி, பணவீக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் இப்போதைய இந்த வட்டி மாற்றம் நடவடிக்கை மூலம் பணவீக்கம் மேலும் குறைய வழி ஏற்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை உரிய நேரத்தில் உரிய திசையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.
அதே நேரத்தில் பணப்புழக்கம் குறைந்துவிடக்கூடாது என்பதில் ரிசர்வ் வங்கி மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டுள்ளது. இதனாலேயே வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருப்பில் வைத்திருக்க வேண்டிய அளவில் மாற்றம் செய்யவில்லை. இதனால் ரொக்கக் கையிருப்பு அளவு (சிஆர்ஆர்) அளவு 6 சதவீதமாக தொடர்ந்து நீடிக்கும்.
நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் கடந்த ஐந்து மாதங்களாக 10 சதவீதத்துக்கும் மேலாகவே உள்ளது. ஜூன் மாதத்தில் நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் 10.55 சதவீதமாகும் என்றார்.
இந்த ஆண்டில் 4வது முறையாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.