கரூரில் இருந்து பழனிக்கு புதிய ரயில் இயக்க கோரிக்கை
இது குறித்து தென்னக ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினரும், கரூர் மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளர் ஹெச். சாகுல் ஹமீது தட்ஸ்தமிழ் செய்தியாளரிடம் கூறுகையில்,
கரூர், அரவைக்குறிச்சி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் வசிக்கும் 10 லட்சம் பொது மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் நலன் கருதி கரூர் முதல் பழனி வரை புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும்.
ஏற்கனவே, பழனி முதல் ஒட்டன் சத்திரம் இருப்புபாதை, திண்டுக்கல் வழித்தடத்தில் அமைந்துள்ளது. எனவே, ஒட்டன் சத்திரம் முதல் கரூர் வரை மட்டும் சுமார் 70 கி.மீ. இருப்பு பாதை அமைத்தாலே போதும். கரூர் -- பழனி ரயில் பாதை செயல்வடிவம் பெறும்.
கரூர் மாவட்டடத்தைச் சேர்ந்த மக்கள் பல்வேறு மாநிலங்களில் தங்கி தொழில் செய்து வருகின்றனர். குறிப்பாக கரூர், பள்ளபட்டி, இடையகோட்டை, ஈசநத்தம், சின்னதாராபும் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் டெல்லி, மும்பை, கொல்கத்தா, போபால், புனே, நாசிக், அகமதாபாத், நாகபுரி மற்றும் ஆந்திரா , கேரளா போன்ற மாநிலங்களில் தொழில் செய்து வருகின்றனர். இதில் 99 சதவீதம் பேர் ரயிலை நம்பியே உள்ளனர்.
இவர்கள் கரூர், திண்டுக்கல் , ஈரோடு, ஆகிய நகரங்களுக்கு சென்று தான் மேற்கண்ட ஊர்களுக்கு பயணம் செய்ய முடியும் என்ற சூழ்நிலை உள்ளது.
எனவே, கரூரிலிருந்து அரவாக்குறிச்சி , பள்ளபட்டி, மார்க்கம்பட்டி, இடையகோட்டை, ஒட்டன்சத்திரம், வழியாக பழனிக்கு புதிய ரயில் பாதை அமைகக் வேண்டும் என்பதே கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இது குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கரூர் வருகை தந்த மத்திய ரயில்வே இணை அமைச்சர் அகமதுவிடம் கோரிக்கை மனு அளித்தள்ளேன்.
இந்த மனுவை பரிசீலனை செய்த மத்திய அமைச்சர் அகமது இது குறித்து நவடிக்கை எடுப்பதாக கடிதம் அனுப்பியுள்ளார். எனவே, இந்த திட்டத்தை உடனே விரைந்து செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என்றார்.