பெண் தாசில்தாரை ஆபாசமாக திட்டியதாக புகார்-கிருஷ்ண பறையனார் கைது
சென்னை: பெண் தாசில்தாரை ஆபாசமாக பேசி திட்டியதாக வந்த புகாரைத் தொடர்ந்து சமூக சமத்துவப் படை அமைப்பின் பொதுச் செயலாளரான கிருஷ்ண பறையானார் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமியைத் தலைவராக கொண்ட தலித் அமைப்புதான் சமூக சமத்துவப் படை. இதன் பொதுச் செயலாளராக இருப்பவர் கிருஷ்ண பறையனார். சென்னையில் வசித்து வருகிறார்.
நேற்று அதிகாலை மதுராந்தகம் டி.எஸ்.பி. தணிகைவேல் தலைமையில் போலீஸ் படையினர் கிருஷ்ண பறையனார் வீட்டிற்கு வந்தனர். அப்போது அவர் தூங்கிக் கொண்டு இருந்தார். அவர் மீது மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் கிருஷ்ண பறையனாரை கைது செய்ய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் கிருஷ்ண பறையனார் கைது செய்யப்பட்டார். அவரை போலீஸ் வேனில் ஏற்றி மதுராந்தகம் கொண்டு சென்றனர்.
மதுராந்தகம் அருகே உள்ள சரவம்பாக்கம் கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு நிலமற்ற ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்றும் கிருஷ்ண பறையனார் நேற்று முன்தினம் மதுராந்தகம் தாலுகா அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார்.
இந்த போராட்டத்தின் போது அவர் மதுராந்தகம் பெண் தாசில்தார் ஆனந்தியை ஆபாச வார்த்தைகளால் தரக்குறைவாக திட்டியதாகவும் இதை தட்டிக்கேட்ட பெருவழி கிராம நிர்வாக அதிகாரி குமரேசன், தாலுகா அலுவலக ஊழியர் ஜேம்ஸ் ஆகியோரையும் கிருஷ்ண பறையனாரும் அவரது ஆதரவாளர்களும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தாலுகா அலுவலக ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர். கிருஷ்ண பறையனாரைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து போலீஸார் நடவடிக்கையில் இறங்கி வழக்குப் பதிவு செய்து கிருஷ்ண பறையனாரைக் கைது செய்தனர்.
கிருஷ்ண பறையனார் மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், ஆபாச வார்த்தைகளால் பேசி மிரட்டியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications