வசூலித்த பணம் மாயம்: தலைமை ஆசிரியர் மிரட்டுவதாக கலெக்டரிடம் புகார்
நெல்லை: ஆங்கில வழியில் படிக்க மாதந்தோறும் வசூலிக்கப்படும் பணம் மாயமானதால் தன்னை தலைமை ஆசிரியர் மிரட்டுவதாக வள்ளியூர் மாணவர் கலெக்டரிடம் புகார் செய்தார்.
வள்ளியூர் தெற்கு ரத வீதியை சேர்ந்த சுப்பையா ராஜ் என்பவரின் மகன் அபினேஷ். அவர் வள்ளியூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு ஆங்கில வழியில் பயின்று வருகிறார். இவர் நேற்று தனது தந்தையுடன் நெல்லை கலெக்டர் அலுவலகம் வந்து ஒரு மனு அளித்தார். அதில் அவரது தந்தை குறிப்பிட்டிருப்பதாவது,
எனது மகன் பயிலும் வகுப்பில் ஆங்கில வழிக்காக மாதந்தோறும் தலா ரூ.120 வசூலிக்கின்றனர். கடந்த மாதம் இந்த கட்டணத்தை வசூலிக்குமாறு எனது மகனிடம் கூறியுள்ளனர். அவ்வாறு வசூலித்த பணத்தில் ரூ.1500 வகுப்பறையில் காணாமல் போனது. அதை அவன்தான் செலுத்த வேண்டும் அல்லது டி. சி. வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும் என தலைமை ஆசிரியர் மிரட்டியுள்ளார்.
மேலும் நேற்று நடந்த அறிவியல் தேர்வை எழுத விடாமல் தடுத்து பள்ளியை விட்டு வெளியே அனுப்பி விட்டார். இதனால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளோம். இவ்வாறு அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதே மனுவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமும் அளித்தனர்.