இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் ராமதாஸ் இருப்பதையும் இழந்து விடக் கூடாது-கருணாநிதி அறிவுரை

இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
சமூகநீதிக் களத்தில் 90 ஆண்டுப் பின்னணி வரலாற்றைப் பெற்றுள்ள இயக்கம் நமது தி.மு.க. திராவிட இயக்கத்தின் ஆணிவேர்க் கட்சியாம் நீதிக்கட்சியின் ஆட்சிக் காலத்தில், 1921-ம் ஆண்டில் முதல் கம்யூனல் ஜி.ஓ. எனப்படும் அரசாணை பிறப்பிக்கப்பட்ட நாள்முதல்; வாழையடி வாழையென வளர்ந்து கழகம் இமயமென உயர்ந்து நிற்கும் இன்றுவரை சமூகநீதி என்பதை நமது உயிர் மூச்சுக் கொள்கையாகப் போற்றிப் பேணி வருகிறோம்.
தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டுக் கொள்கையை மறுஆய்வு செய்யும் பிரச்சினை பல்வேறு கட்டங்களில் எழுப்பப்பட்டு வந்தாலும், முதல்முறையாக நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், 1969-ம் ஆண்டில் ஏ.என்.சட்டநாதன் தலைமையில் 13.11.1969 அன்று பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலனுக்காகவும், அவர்களுடைய நிலையை மேம்படுத்த மாநில அரசு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்று பரிந்துரை செய்யவும், தமிழகத்தின் வரலாற்றில் முதன்முதலில் அமைக்கப்பட்ட குழு இதுதான்.
இந்தச் சட்டநாதன் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலேதான் அதுவரை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 16 சதவீதம்; பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 25 சதவீதம்; என்றிருந்த இடஒதுக்கீட்டு அளவை மாற்றியமைத்து, 7.6.1971 அன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 18 சதவீதம்; பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 31 சதவீதம்; என உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது.
பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள பல்வேறு வகுப்புகள், கல்வி நிலையங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில் தங்களுக்கு உரிய பங்கினைப் பெற முடியவில்லை என்கிற உணர்வு மேலோங்கி, மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினருக்கு தனிஒதுக்கீடு வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்று வந்ததையொட்டி; பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை கலந்தாலோசித்து; பிற்படுத்தப்பட்டோர்க்கான 50 சதவீத இடஒதுக்கீட்டில், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 20 சதவீதம் ஒதுக்கியும், மீதமுள்ள 30 சதவீதத்தை பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கியும்; நான் மூன்றாம் முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றதற்குப் பின்னர் 28.3.1989 அன்று ஆணையிடப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியினர் மக்கள் தொகையைக் கருத்தில்கொண்டு, 1990ம் ஆண்டில் பொதுத் தொகுப்புக்கான ஒதுக்கீட்டிலிருந்து தனியே 1 விழுக்காடு பழங்குடியினருக்கும், 18 விழுக்காடு தாழ்த்தப்பட்டோருக்கும் என 22.6.1990 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.
நான் ஐந்தாம் முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு, தற்போது சிறுபான்மை முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்து, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் ஜனார்த்தனம் பரிந்துரையினைப் பெற்று, பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டில் இருந்து 3.5 சதவீத இடஒதுக்கீட்டினை பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு என தனியே இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
அதைப்போலவே, தாழ்த்தப்பட்டோருள் கடைக்கோடிப் பிரிவினராய் இருந்துவரும் அருந்ததியர்க்கு தனி இடஒதுக்கீடு தரப்பட வேண்டுமென்ற கோரிக்கையினை ஏற்று, தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டுவரும் 18 சதவீத இடஒதுக்கீட்டில் 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
நான் இவ்வளவு விவரங்களையும் தொகுத்துச் சொல்வதற்குக் காரணம் இடஒதுக்கீட்டின் பரிணாம மாற்றங்களை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். பிற்படுத்தப்பட்டோருக்கென வழங்கப்பட்டு வந்த 30 சதவீத மொத்த இடஒதுக்கீட்டில், மிகப்பிற்படுத்தப்பட்டோருக்கு தனியே 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதும்; பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை இஸ்லாமியர்க்கு 3.5 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கியதும்; அருந்ததியர்களுக்கு 3 சதவீத தனி உள்ஒதுக்கீடு வழங்கியதும்; பழங்குடியினர்க்கு ஒரு சதவீதம் தனி ஒதுக்கீடு வழங்கியதும் கழக ஆட்சியிலேதான்.
எப்போதுமே கோரிக்கைகளிலே நியாயம் இருக்குமேயானால்; சட்டமும் காலமும் ஒத்துவருமானால்; அந்த கோரிக்கைகளை ஒத்திப்போடாமல் உடனடியாக ஏற்று, நிறைவேற்றி வருவது கழக ஆட்சி என்பதனை நடுநிலையாளர்கள் நன்கு அறிவார்கள். அந்த அடிப்படையிலே தான் மிகப் பிற்படுத்தப்பட்டோர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும், அருந்ததியர்களுக்கும், பழங்குடியினர்க்கும் தனித்தனியே இடஒதுக்கீடுகள் கழக ஆட்சியிலே வழங்கப்பட்டுள்ளன.
தற்போது டாக்டர் ராமதாஸ், அருந்ததியர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்கி வருவதை முன்னுதாரணமாகக் காட்டி, வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று சொல்லியிருக்கிறார். அவர் வைத்துள்ள கோரிக்கையிலே இருக்கும் அடிப்படை நியாயங்களைப் பற்றியெல்லாம் இந்தத் தருணத்தில் நான் விரிவாக விவாதிக்க விரும்பவில்லை. அருந்ததியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உள் ஒதுக்கீட்டையும், சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தனி இடஒதுக்கீட்டையும் - வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீட்டுடன் ஒப்பிடுவது பொருத்தமாக இருக்காது.
தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கென நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றத்திலே 1994-ம் ஆண்டு வழக்கு தொடுக்கப்பட்டு, ஏறத்தாழ 16 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது உச்சநீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பொன்றை வழங்கியிருக்கிறது. அந்த இடைக்காலத் தீர்ப்பில், ஒரு மாநிலம் 50 சதவீத இடஒதுக்கீட்டு அளவை விஞ்ச வேண்டுமென்றால், அதனை நியாயப்படுத்துவதற்குத் தேவையான புள்ளி விவரங்களின் அடிப்படையில் முடிவு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் நாம் தேவையான புள்ளிவிவரங்களை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளித்து, அந்த ஆணையம் நாம் அளித்திடும் புள்ளி விவரங்களை ஆராய்ந்து, இடஒதுக்கீட்டு அளவை முடிவு செய்யும் வாய்ப்பை உருவாக்க வேண்டும்.
இந்தப் புள்ளிவிவரங்களைச் சேகரிப்பதற்கு நமக்கு சாதிவாரியான மக்கள்தொகை விவரங்கள் வேண்டும். அதற்கு சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ் மாநிலத்தில் மட்டும் சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டுமென்றால், அதற்கு ரூ.400 கோடி நிதி தேவைப்படுகிறது. அந்த நிதியை மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெறலாமென்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஆலோசனை வழங்கியிருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின்படி, தமிழகத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால்தான், வன்னியர்களுக்கு எவ்வளவு இடஒதுக்கீடு அளிக்கலாம்; மற்றும் ஒவ்வொரு தனிப்பட்ட சாதியினருக்கும் எவ்வளவு இடஒதுக்கீடு அளிக்கலாம் என்பதையெல்லாம் முடிவு செய்திட இயலும். அப்படிச் செய்தால்தான், சட்டப்படி அந்த முடிவுகள் எல்லாம் செல்லுபடியாகும். அப்படியில்லை என்றால் நாம் எடுக்கும் முடிவு சட்டத்திற்குப் புறம்பானதாக ஆகிவிடக்கூடும்.
எனவே, வன்னியர்களுக்குத் தனி இடஒதுக்கீடு என்ற பிரச்சினையில் நாம் உடனடியாக அவசர முடிவு எதையும் மேற்கொள்வதற்கு உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு இடம்தரவில்லை என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொண்டு, நமது மாநிலத்திற்கான இடஒதுக்கீட்டு அளவை நிர்ணயம் செய்து, அதற்குப்பிறகு தனி ஒதுக்கீடு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுதான் சட்டப்படியான அணுகுமுறையாக அமைந்திடும்.
இதில் அவசரம் காட்டினால், பிரச்சினை திசைதிரும்பிவிடக்கூடும் என்பதாலும், இருப்பதையும் இழந்துவிடக்கூடாது என்பதாலும் தொடர்புடைய அனைவரும் இந்த இடஒதுக்கீட்டுப் பிரச்சினையில் இணக்கமான ஒத்துழைப்பினை வழங்கிட வேண்டும் என்று நான் பெரிதும் விரும்புகிறேன். எனவே இருப்பதை இழக்காமல் இடஒதுக்கீடு அமைய இணைந்து செயல்படுவோம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications