ரயில் நிலையத்தில் வாலிபரை கொன்ற 4 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலை பறக்கும் ரயில் நிலையத்தில் காதலியைக் கற்பழிக்க முயற்சித்தபோது அதைத் தடுக்க முயன்ற காதலரைக் கொடூரமாக கொன்ற நான்கு ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் வள்ளீஸ்வரன் தோட்டத்தை சேர்ந்தவர் நான்சி (22). இவர் காதலன் சரவணன் (27). காதலர்கள் இருவரும் கடந்த மாதம் 14-ம் தேதி அன்று கிரீன்வேஸ் பறக்கும் ரயில் நிலையத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த பால்சன் (25), ராஜி (29), ராஜா (27), ஆறுமுகம் (26) ஆகிய 4 ரவுடிகள் நான்சியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளனர். இதைப் பார்த்து கோப்ப்பட்ட சரவணன் அவர்களை தடுத்து நிறுத்தி தட்டிக் கேட்டுள்ளார்.
உடனே அந்த 4 ரவுடிகளும் தங்கள் வீராப்பை காட்ட சரவணனை சரமாரியாக குத்தி கொன்று விட்டனர். நான்சியின் கழுத்தில் இருந்த ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து 4 ரவுடிகளையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அந்த 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு தேனாம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் பரிந்துரைத்தார்.
இதையடுத்து அவர்கள் 4 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications